இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16
‘கர கர' என்று என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனார் தந்தை.
கோலார் தங்கச் சுரங்கத்திலே எனது தாய்மாமன் வேலை பார்த்து வந்தார். அவரிடமிருந்து ஒரு நாள் வந்தார் எனது பாட்டியார்.
‘கோலாரிலே, பூமியைத் தோண்டித் தங்கம் எடுக்கிறார்கள்' என்று என் பாட்டி சொன்னார். அதைக் கேட்டேன் நான். பாதாள உலகம் பற்றிப் பாட்டியாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள எண்ணினேன்.
‘பாட்டீ!' என்றேன்.
'ஏன்' என்றார் அவர்.
‘சுரங்கம் என்றால் அது எப்படி இருக்கும் பாட்டி' என்று கேட்டேன்.
'பூமியைக் குடைந்து கொண்டு போவார்கள். அதுவே சுரங்கம்' என்றார் பாட்டியார்.
'அப்படியானால் அங்கே பாதாள உலகம் இருந்ததோ! நீங்கள் பார்த்தீர்களோ' என்று கேட்டேன்.
பாட்டியார் பதில் கூறவில்லை. விழித்தார். எனது ஐயம் தீரவில்லை.