பக்கம்:உலகம் பிறந்த கதை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

இந்த பூமி இருக்கிறதே! இதன் முக்கால் பகுதி கடல். கால் பகுதி தான் நிலம்.

கடலின் வயதைக் கண்டுபிடிப்பது எப்படி? கடலிலே உள்ள உப்புதான் அதன் வயதைக் காட்டியது. கடலிலே உப்பு ஏது? எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது?

ஆறுகள் கொண்டு வந்தன.

வானத்திலிருந்து பொழிகிறது மழை. அம் மழை நீரை ஏந்திக் கீழே இறக்கி விடுகின்றன மலைகள்.

மழை நீர் என்ன செய்கிறது? வானத்திலிருந்து பூமிக்கு இறக்கி விட்ட மலையரசை மதிக்கிறதா? இல்லை; மிதிக்கிறது; இடிக்கிறது; தகர்க்கிறது.

பாறைகளை உருட்டிக் கொண்டு ஓடுகிறது. குதிக்கிறது. 'இடி இடி' என்று சிரிக்கிறது. கீழே இறங்குகிறது. பூமியைத் தோண்டுகிறது. மண்ணை வாரிக் கொண்டு ஓடுகிறது. மண்ணைக் கரைத்துக் எடுத்துக் கொண்டு போய் கடலில் கொட்டுகிறது. மண்ணிலே உப்பும் இருக்கிறது. அந்த உப்பு, நீரிலே கரைந்து விடுகிறது. மண் மட்டும் கரையாதிருக்கிறது.