பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மதங்கள்

59

கடைசி நாட்கள் பற்றியும் கூறுவது. எழுத்து வடிவில் உள்ள இச் சட்டம் மனித வாழ்க்கையைப் பற்றிக் கூறும் 163 அதிகாரங்களைக் கொண்டது.

தீர்க்க தரிசனம் என்பது சரித்திர புத்தகங்களும், தீர்க்க தரிசிகளில் உரைகளுமாகும். அவை இரண்டாகப் பிரிந்துள்ளன.

மூன்றாவதான பிரபந்தம் என்னும் மற்ற எழுத்துக் கோர்வையில் பிரசித்தி பெற்ற சாலமன் போன்ற மன்னர்களின் கதைகள், பழமொழிகள், அறவுரைகள் பாடல்கள் அடங்கியுள்ளன.

யூதமதத் தத்துவம்

கடவுள் உலகத்தைப் படைத்தார். அதன் முன்னேற்றத்தை மனிதனிடம் ஒப்படைத்தார் என்பது. பைபிள் பொதுத் தொண்டு, இரக்கம், நல்லன செய்தல் ஆகியவை பொது நியதி. கடவுள் நல்லதே செய்வார், நியாயமே அவரது செய்கை. மனிதன் தன் நேர்மையான நடத்தையின் மூலம் கடவுளின் பிரியத்திற்குப் பாத்திரமாகி அவருடைய வேலைக்குத் துணையாகிறான். மனித வாழ்க்கையின் உண்மைக் காரணம், பலனை எதிர்பாராமல் தீய சக்திகளை அழித்து நன்மைகளைச் செய்யும் கடவுளுக்குத் துணையாக இருப்பதாகும். கறைபடாத கரங்களும், தூய இதயமும் உள்ளவர்கள் கடவுளின் அருகில் இருக்க அருகதையுடையவர்கள். அனாதைகளுக்கும் பலவீனர்களுக்கும் கடவுள் துணையாக இருக்கிறார். அடுத்தவனைத் தன்போல் நேசிக்கவேண்டும். யாரையும் வெறுக்காதிருக்க வேண்டும். பழிவாங்கும் நோக்கம் கூடாது. குரோதம் உதவாதது. அடுத்தவன் எல்லாம் சகோதரன், மனதாலும், வாக்காலும் யாருக்கும் தீங்கு எண்ணக்கூடாது.

சத்தியமே கடவுளின் முத்திரை. கிடைத்ததைக்கொண்டு திருப்தி கொள்பவனே செல்வந்தன். கடவுளின் தண்டனைக்கு அஞ்சாமல் அவரிடம் உள்ள பிரியத்தால் சரணடைந்தால் அடைக்கலம் உண்டு,