பக்கம்:உலகைத் திருத்திய உத்தமர்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

புரட்சி செய்த

பாதிரியார் தயவில் அன்னெஸி நகரத்திலிருந்து, லாரன்ஸ் சீமாட்டியை அணுகி, பாதிரியார் கொடுத்த சிபாரிசு கடிதத்தைக் கொடுத்து அங்கு தங்கியிருந்தார். அப்போது ரூசோவுக்கு வயது பதினைந்து. அந்த சீமாட்டிக்கு வயது 28. அங்கேதான் தன்மேல் கருணை காட்டிய அவள், காதல் காட்ட மாட்டாளா என்று ஏங்கினார். இதை அவள் புரிந்துகொள்ளவுமில்லை; பொருட்படுத்தவுமில்லை. அந்த டூரின் நகரில் தன்னை வேலைக்கமர்த்திக் கொண்ட இரண்டொரு சீமாட்டிகளிடமும் இவர் ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை. இப்படியே அலைந்த இவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஒரு பிரவுவின் தயவால் ஒரு ஓட்டலில் தங்க வேண்டி வந்தது. அதில் வேலைக்காரி-ஒருத்தி தெரஸ் என்பவள் பணி புரிந்து வந்தாள். எழுதப் படிக்கத் தெரியாது. அழகானவள். ஒழுங்காக வேலைகளைச் செய்வாள். அவளிடம் ரூசோ கொண்ட நட்பு, நாளுக்கு நாள் காதலாக மாறி அவள் மூலம் இரண்டு குழந்தைகளைப் பெற்றார். அவை சட்டரீதியான மனைவிக்குப் பிறக்காத காரணத்தால் ஒரு அனாதை விடுதியில் விட்டு விட்டார். அதன் பிறகு வேறொரு காதலிக்குப் பிறந்த மூன்று குழந்தைகளையும் அதே அனாதை விடுதியில் விட்டு விட்டார். இவர்தான் பிளேட்டோ குழந்தைகளைப் பற்றி எழுதிய நூலைத் தழுவி (Emile) எமிலி என்ற நூலை எழுதினார். அதே ஆண்டு தான் (Social Contast) என்ற உலகப் புகழ் பெற்ற சமுதாய ஒப்பந்தம் என்ற நூலும் வந்தது. அதற்கு முன்னமேயே தான் களைத்தபோதெல்லாம் படிப்பதற்காக வாங்கிவைத்திருந்த மெக்பூர்-டி-பிரான்சு (Meeurc-D France) என்ற நூலைப் படிக்கும்போது உலகமே ஒளி மயமான ஒரு தோற்றத்தை யடைந்ததாகக் கண்டார். காரணம் டி ஜோன் பல்கலைக்கழகம் ஆண்டு தோறும் கட்டுரைப் போட்டி ஒன்று நடத்துவது வழக்கம். அந்த ஆண்டு விஞ்ஞானம், கலை இவற்றின் வளர்ச்சி மனிதனின் தார்மிகப் பண்பை வளர்த்து முன்னேற்றியிருக்கிறதா அல்லது அதைக் கெடுத்து மோசமாக்கியிருக்கிறதா? என்று எழுதினால் அவற்றில் சிறப்புடைய கட்டுரைக்கு பரிசு கிடைக்கும் என்று அறிவித்திருந்தது.