பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



விடுதலை வீரர்கள்

9



சுபாஷ் மீது பலவிதமாக பழிகளை பிரிட்டிஷ் அரசு சுமத்தியது. பக்கத்து நாடான பர்மாவுக்கு நாடு கடத்தியது. அங்கே மாந்தலே சிறையில் வைக்கப்பட்டார். அதே நேரத்தில் தீவிரவாதிகளை எல்லாம் பிரிட்டிஷ் அரசு கொடுமைப்படுத்தி சிறையில் அடைத்தது.

சிறைக் கொடுமை சுபாஷை வாட்டிவதைத்தது. பலமிக்க அவர் உடல் வாடியது. நோய்க்கு இலக்கானார். பிரிட்டிஷ் அரசு அவரை உடனே விடுதலை செய்தது.

போஸுக்கு நோய் மிகவும் மோசமாக இருந்ததால் ஐரோப்பாவில் உள்ள வியன்னாநகர மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். அப்பொழுது இந்தியாவிலே நடந்த காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் சுபாஷ் சந்திர போலை தலைவராக காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுத்தது.

குஜாராத் மாநிலத்திலுள்ள அரிபுரா என்ற நகரில் காங்கிரஸ் பேரவை கூடியது. மக்கள் இலட்சக் கணக்கில் திரண்டு சுபாஷ் சந்திரபோஸ் தலைமையை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டார்கள். அப்போது அவர் ஆற்றிய தலைமை உரை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் குலைநடுங்க வைக்கும் வீரஉரையாக அமைந்தது.

அடுத்த ஆண்டும் சுபாஷ் சந்திர போஸ் அகில இந்திய காங்கிரஸ் பேரரவையின் தலைவர் ஆனார். பிரிட்டிஷ் பேரரசு இன்னும் ஆறு மாதங்களுக்குள் இந்திய நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று அவர் எச்சரித்தார்.