பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

உலக வரலாற்றில்



முதல் உலகப்போர் முடிந்ததும், யூகோஸ்லேவியா, ஆஸ்திரிய, ஹங்கேரி போன்ற நாடுகளின் ஆதிக்கத்திலே இருந்து விடுபட்டு தனிமன்னர் ஆட்சியுடன் தனிநாடானது.

ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியைப் போல யூகோவிலும் ஒரு புதுக் கட்சியை டிட்டோ துவக்கினார்! மக்கள் இடையே சுதந்திர எழுச்சியை ஏற்படுத்தினார்; கிளர்ச்சிகளுக்கு வித்திட்டார் ஆங்காங்கே கிளர்ச்சிகள் நடந்தன.

இந்த நிலையை உணர்ந்த யூகோ மன்னராட்சி, டிட்டோவை 1929-ம் ஆண்டில் கைதுசெய்தது ஐந்தாண்டு தண்டனை வழங்கி அவரைச் சிறையில் பூட்டியது.

சிறைக் கொடுமைகளை டிட்டோ மகிழ்ச்சியுடன் ஏற்று அனுபவித்தார்! பின்னர் தண்டனைக் காலம் முடிந்தவுடன் அவரை மன்னராட்சி விடுதலை செய்து, யூகோ நாட்டில் இருக்கக் கூடாது என்று நாடு கடத்தும் உத்தரவைப் பிறப்பித்தது.

இந்த உத்தரவை ஏற்ற டிட்டோ மீண்டும் ஐரோப்பா சென்றார். அங்கிருந்த நாடுகளின் புரட்சியாளர்களுடன் தொடர்புகொண்டு திட்டங்கள் தீட்டினார்.

இந்த நேரத்தில், யூகோஸ்லேவிய நாட்டுக்கம்யூனிஸ்ட் கட்சி டிட்டோவைப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்தது. உடனே டிட்டோ தனது தாய் நாட்டுக்குத் திரும்பினார்.