பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8. சொல்வல்ல காதை


இலக்கியங்கள் பயிலாமல், இலக்க ணத்தின்
இயல்பொன்றும் அறியாமல், நுனிப்புல் மேய்ந்து,
சொலக்கருதும் ஒருபொருளைச் சிந்தித் தாய்ந்து
சொலுமுறையாற் சொல்லாமல், முழக்க மிட்டுக்
கலக்கிவரும் பேச்சாளர் இற்றை நாளில்
கணக்கிலராய்ப் பெருகிவரல் காணு கின்றோம்;
இலக்கவர்க்குப் பொருள்வருவாய் ஒன்றே யன்றி
இலக்கியத்தின் வளர்ச்சியன்று; யாது செய்வோம்?
1
பழுதறநூல் பயில்வார்பின் அதனுள் தோய்ந்து
பயன்பெறுவார் இன்புறுவார் சிந்தித் தாய்ந்து
முழுமதியாற் பகுத்துணர்ந்து முடிபு காண்பார்
மொழியுங்கால் நிரல்படுத்தி அவையில் நின்று
வழுவகல நன்மொழியாற் கேட்போர் நெஞ்சம்
மகிழ்ந்துகொள எடுத்துரைப்பார் அற்றை நாளில்:
தொழுதகையார் பெறுமின்பம் பிறகும் பெற்றுத்
துய்ப்பதையே காமுறுதல் தொன்மைக் கொள்கை
2