பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சொல்வல்ல காதை ௬௯


எப்பொருளும் எடுத்துரைக்கும் ஆற்றல் மிக்கார்
எனினுமவர் சங்கத்துப் பாடல் என்றால்
ஒப்பெதுவும் இலைஎன்ன உவகை கொள்வார்;
உள்ளுறி வருமொழியாற் மொழிந்து நிற்பார்;
எப்பொருளும் கல்லாரும் விளங்கிக் கொள்ள
எளிதிலதை விளக்குவதை வியவார் யாரே?
அப்பெருநூ லவற்றிடையே அகப்பொ ருட்பா
அரங்கமர்ந்து கொடுப்பதிலே அவரே ஒப்பார். 9

கேட்டாரை வயப்படுத்தி மகிழ வைத்துக்
கேளாரும் விழைந்துவர மொழியுஞ் சொல்லர்;
பாட்டாரும் நாநலத்தால் வகைப்ப டுத்துப்
பயன்விளைய முறைப்படுத்து விளக்குஞ் சொல்லர்:
ஏட்டாலும் பேச்சாலும் மறுத்து ரைக்க
இயலாத படியுரைக்கும் வெல்லுஞ் சொல்லர்;
நாட்டாரை விரைந்து தொழில் கேட்கச் செய்யும்
நகரத்தார் குலத்துதித்த இனிய சொல்லர். 10

நாவசையும் மணியொலியைக் கேளா ஊர்கள்
நமதுதமிழ் நாட்டிலிலை; கரையை நோக்கித்
தாவலைகள் படர்ந்துவருங் கடல்க டந்தும்
தமிழ்மணியின் ஓசையது கேட்ட துண்டு;
பாவமுது படைக்குமிசை செவிம டுத்தார்
பாராட்டிப் பாராட்டி அழைப்ப துண்டு;
கோவலர் வாய்க் குழல்போலக் கேட்டார் நெஞ்சைக்
குளிர்விக்கும் இயல்பிற்றே சொல்லின் வன்மை. 11