பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சபைகாண் காதை


இலக்கணநூல் வல்லுநரும் இலக்கியநூல்
சொல்லுநரும் ஆசான்மா ராக நின்று
துலக்கமுற விளக்கமுறப் பயிற்றிய நற்
றொண்டதனாற் பயன்பெற்றோர் அளவைச்
சொல்ல
இலக்கமிலை, பல்கலைசேர் கழகங்கள்
கல்லூரி பள்ளியெனும் இவற்றி லெல்லாம்
தலைக்கொளும்பே ராசிரியப் பொறுப்பினராய்ச்
சான்றோராய்க் கவியரசாய்த் திகழு கின்றார்.18

தொடுவதெலாந் துலங்கவைக்குங் குடியில் வந்த
தொடர்பதனால் பழநியப்பர் தொடங்கி வைத்த
நெடியபுகழ்ச் சன்மார்க்க சபைவ ளர்ந்து
நிலைத்திருந்து துலங்குவதைக் காணு கின்றோம்;
விடுகதிர்போல் விளங்குகதி ரேசர், நெஞ்சின்
விழைவிலுரு வானசபைத் தொடர்பால் குன்றில்
இடுவிளக்கின் ஒளிபோலத் தமிழ்நா டெங்கும்
இசைபரப்பித் தமிழ்பரப்பி விளங்க லுற்றார். 19

நிலைத்த பணி புரிந்திருக்கும் பழநி யப்பர்
நிலையாமை தமக்குவரல் உணர்ந்து கொண்டார்
களைத்துடலம் பிணியுற்று வருந்தும் போதும்
கவலையெலாம் சபையின் மேல் வைத்தி ருந்தார்;
அலைத்தகடல் சூழிலங்கை சென்றி ருந்த
அண்ணாம லைக்குமடல் எழுதி வைத்தார்;
மலைக்காமல் சன்மார்க்க சபையை என்றும்
வளர்ப்பதுநின் கடமையென வரைந்தி ருந்தார்20