பக்கம்:ஊன்றுகோல், பண்டிதமணி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஊன்றுகோல்



பின்வந்த அவ்விளவல் தலைமை யேற்ற
பிறகுசபைப் பொறுப்பனைத்தும் கதிரே சர்க்கு
முன்வந்து சேர்ந்தமையால் தாமே நின்று
முழுநோக்கும் அதனிடத்துச் செலுத்தி வந்தார்.
வன்குன்றத் தோளுடையான், உழைப்புக் கஞ்சான்,
உழவனுக்கு வயலொன்று வாய்த்த தைப்போல்
பொன்குன்ற நகருறையும் புலவ ருக்குப்
புகழ்விளைக்குஞ் சபையொன்று கிடைத்த தையா.21

பேருந்து முதலான ஊர்தி காணாப்
பெருமைத்தாம் அவ்வூரில் [1] ஆண்டு தோறும்
சீருந்தச் சிறப்புத்த விழாந டக்கும்
செந்தமிழில் வல்லரெனச் செப்பு கின்ற
பேருந்துஞ் சான்றோர்தாம் பெரிது வந்து
வழியருமை பேணாது குழுமி வந்து
காருந்திப் பொழிவதுபோற் பொழிந்தி ருப்பர்
களித்ததனுள் நனைந்திருப்பர் அவையோர் கேட்டு 22

ஒருவாரத் திருநாள்போல் சபையின் சார்பில்
ஊர் மகிழ நிகழ்வுறுமவ் விழாவுக் காக
வருவார்க்கும் ஆய்வுரைகள் அள்ளி யள்ளித்
தருவார்க்கும் நல்லுணவு வழங்குஞ் சாலை,
பொருள்வார்க்கும் அப்புலவர் தங்கு தற்குப்
பொலிவுதரும் உள்ளறைகள், கேட்க வந்து
நிறைவார்க்குப் பூம்பந்தர் அனைத்துந் தென்னே
நெடுங்கீற்றால் ஒப்பனையால் விளங்கச் செய்வர்23


  1. மேலைசிவபுரி