பக்கம்:ஊர்வலம் போன பெரியமனுஷி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வள்ளி வேடிக்கை பார்ப்பதில் ஆழ்ந்திருந்தாள்.

"ஏம்மா, நீ தனியாவா போறே?" என்று ஒரு குரல் அவள் கவனத்தைக் கவர்ந்தது. புதிதாக ஏறிய எவளோ ஒருத்தி. வயசு முதிர்ந்தவள். அவள் பாம்படமும், தொள்ளைக்காதும்! கருப்பட்டிப் புகையிலையும் வெத்திலைச் சாறும்! உவே, மூஞ்சியைப் பாரு என்றிருந்தது. வள்ளிக்கு.

“ஆமா. தனியாகத்தான் போறேன். நான் டிக்கட் வாங்கியாச்சு" என்று மிடுக்காகச் சொன்னாள்.

“ஆமா. டவுணுக்குப் போறாங்க. முப்பது காசு டிக்கட்டு" என்றான் கண்டக்டர்.

“நீ போயேன் ஒன் சோலியைப் பாத்துக்கிட்டு!" என்று சொன்னாள் வள்ளி. சிரிப்பு வந்தது அவளுக்கு.

அவன் குறும்புத்தனமாகச் சிரித்தான். ஒன்றும் சொல்லவில்லை.

"சின்னப்புள்ளெ இப்படி ஒத்தையிலே புறப்பட்டு வரலாமா? டவுணிலே எங்கே போகணும்? வீடு தெரியுமா, தெரு தெரியுமா?" என்று நீட்டினாள் பெரியவள்.

“ஒங்கிட்டே ஒண்ணும் கேட்கலே. எனக்கு எல்லாம் தெரியும் போ" என்று எரிந்து விழுந்தாள் வள்ளி. மேலே பேச்சைக் கேட்கவோ, பேச்சைக் கொடுக்கவோ, விரும்பாதவளாய் வெளியே பார்த்தபடி இருந்தாள்.

இது அவளுடைய முதல் யாத்திரை. மகாப் பெரிய யாத்திரை. எத்தனை காலமாக ஆசைப்பட்டு, கனவு கண்டு, திட்டமிட்டு, இன்று பலித்திருக்கிறது இது. 'முப்பதும் முப்பதும் அறுபது!' சுலபமாகத் தோன்றலாம் நமக்கு. வள்ளி அதைச் சேர்க்க எவ்வளவு

20