எக்கோவின் காதல் ✽
கவியரசர் முடியரசன்
109
இச்செயலெல்லாம் கிருஷ்ணனுக்கு ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. அவள் அவனுடைய அத்தை மகள். கொஞ்சம் பணம் படைத்தவள். படித்தவளுங்கூட. முறைமை யால் மணக்க எண்ணங் கொண்டிருந்தான் கிருஷ்ணன். ஆனால் அவள் விரும்பினால்தானே!
அவள் காதல் முழுதும் அர்ச்சுனனிடந்தான். அர்ச்சுனனை விடக் கிருஷணன் எவ்வளவோ அழகில் சிறந்தவன். என்றாலும் அவள் அவனை விரும்பவில்லை. ஆம்! உண்மைக் காதலுக்குச் சாதி வேற்றுமை-ஏழை பணக்காரன் என்ற தன்மை, இவையெல்லாம் கிடையாதென்றால் அழகு மட்டும் என்ன தள்ளுபடியா? அழகையும் அந்தப் பட்டியலிலே சேர்த்து விட்டாள் மதுரம்.
'கிருஷ்ணன் - மதுரமாக' வாழ எண்ணினான் கிருஷ்ணன். ஆனால் அவன் எண்ணத்திற்கு ஓர் அர்ச்சுனன் குறுக்கிட்டான். இந்த எண்ணத்திற்கு மட்டும் யாரேனும் குறுக்கிட்டால் கோழையாயிருந்தாலும் அவனுக்குக் கொஞ்சம் வீரந் தோன்றும். கிருஷ்ணன் இயல்பிலேயே முரடன். பேச்சுத்தான் அகிம்சை செயல் வேறுதான். அவன் 'சந்தர்ப்பத்தை' எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
"நீங்கள் நாளை நடைபெறப் போகும் பொதுக் கூட்டத்தில் கொடியேற்றி வைக்க வர வேண்டும்” என்று அர்ச்சுனன் மதுரத்திடம் கேட்டான்.
“என்ன பொதுக் கூட்டம்?”
"திராவிடர் கழகப் பொதுக் கூட்டம். தலைவர் பட்டுக்கோட்டைப் பக்கிரிசாமி; கிருஷ்ணனும் வருகிறார்”.