பக்கம்:எக்கோவின் காதல்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

133

“சும்மா இருங்கசாமி - இன்னும் ஒரு வாரத்திலே அந்த ஆசாரிப் பயலே தொலச்சுடுறேன் ". என்று கறுப்பண்ணன் சொன்னது என் காதில் நன்றாக விழுந்தது. செய்தி இன்னதென்று புரிந்து கொண்டேன். அந்த நிலைக்கு என் மனம் இடந்தரவில்லை . அவருக்குக் கடிதமூலம் அறிவித்தேன்.

சில நகைகளோடும் கொஞ்சம் பணத்தோடும் சென்னை வந்து சேர்ந்தோம். இருப்பதை வைத்து ஒரு நகைக்கடை வைத்தோம். செல்வம் சேர்ந்தது. உன்னையும் பெற்றெடுத்தேன். உன் முகத்தைப் பார்த்துப் பார்த்து என் கவலைகளை எல்லாம் மறந்து விட்டேன்.

நிறுத்து கண்ணா , இதுதான் என் கதை. இதுவரை இந்தச் செய்தி ஒன்றும் உனக்குத் தெரியாது. நானும் சொல்லவில்லை. அந்தப் பழைய சம்பவங்களை எல்லாம் இன்று நீ நினைப்பூட்டி விட்டாய்! இது எப்படியோ அவர்களுக்குத் தெரிந்து விட்டது போலிருக்கிறது. அதனால் உன்னை 'அவமானச் சின்னம்' என்று சொல்லியிருக்கிறார்கள்”.

படித்துக்கொண்டிருந்த கண்ணப்பன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே “அம்மா!சரி. இதற்காகத்தான் சொல்லியிருக்கிறார்கள். சென்றதைப் பற்றிக் கவலைப்படுவதில் பலனில்லை . அதோ! அப்பாவும் வந்து விட்டார். சோறு போடுங்கள் . சாப்பிடலாம்" - என்று எழுந்து சென்றான்.

மறுநாள் கண்ணப்பன் தன் உயிர் நண்பன் ஞானம் வீட்டிற்குச் சென்றான். அவனைத் தனியாக அழைத்தான்.

“ஞானம்! நீ சீர்திருத்த வாதிதானே?”