பக்கம்:எக்கோவின் காதல்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

...’ என்று அவள் சொல்லும்போது அவள் முகம் பெரிதும் கலவரம் அடைந்ததுபோல் காணப்பட்டது.

‘என்ன உங்கள் நிலை? யாராயிருந்தால் எனக்கென்ன? நான் மக்களுக்காக - அவர்களுடைய நல்வாழ்வுக்காக என் உயிரையுங் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறேன். நான் திட்டங்களை மட்டும் தீட்டிக் கொண்டிருக்கும் வெறும் எழுத்தாளன் மட்டுமல்லன், செயலில் இறங்க வேண்டும் என்று விரும்புகிறவன். நான் உண்மையில் மாக்ஸிம் கார்க்கியைப் போன்றவன். இதைத் தற்பெருமை என்று எண்ணிவிட வேண்டாம். அவன் ஒரு சிறந்த எழுத்தாளனாக இருந்ததோடல்லாமல், புரட்சி இயக்கத்தில் பெரிதும் பங்கு கொண்டு பணியாற்றியவன். அவனைப் போலவே நம் நாட்டு எழுத்தாளர்களும் திகழவேண்டும் என்று கனவு காண்பவன் நான். அதனால் உங்கள் நிலையைச் சொல்லுங்கள். உங்கள் பொருட்டு என்னால் இயன்றதை, என் மனமார ......’ என்று அவன் முடிக்கு முன்பு இவள் பேசினாள்.

‘மனமார வாயார என்று வெறும் பேச்சாகத் தானே இருக்கிறது. செயலில் ஒன்றும் இல்லையே’ என்றாள்.

‘என்ன சொல்லுகிறீர்கள்? நீங்கள் பேசுவது ஒன்றும் புரியவில்லையே! நான் தங்கட்கு விடை எழுதாமல் இருந்ததைக் குறிப்பிடுகிறீர்களா?’

‘இதற்குமேல் ஒரு பெண் எவ்வளவுதான் சொல்ல முடியும்? உங்கள் கற்பனை யெல்லாம் எழுத்தளவிற்றானா?’ என்று சிரித்தாள்.

‘உங்கள் எண்ணத்தை - நிலையை இப்பொழுது புரிந்து கொண்டேன். ஆனால், உங்கள் விருப்பம் நிறைவேறுவ தென்பது இயலாத ஒன்றுதான்’.