பக்கம்:எக்கோவின் காதல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

இதனால் புரட்சி மனப்பான்மை குன்றியா போய்விடும். ஒரு நாளும் என்னை அப்படி எண்ணாதீர்கள், என்னையும் ஒரு 'கொரில்லாப் பெண்' என்று எண்ணிக் கொள்ளுங்கள்'.

பேசிக் கொண்டிருக்கும் பொழுது கீழே கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. யாரோ கதவைத் திறந்தார்கள்.

'எக்கோ இங்குதானே இருக்கிறார்?' என்று வந்தவர் கேட்டார். இது எக்கோவின் காதிலும் விழுந்தது.

'யார் இங்கே வந்து, இந்நேரத்தில் என் பெயரைச் சொல்வது!' என்று சொல்லிக்கொண்டே விரைவாகக் கீழே இறங்கி வந்தான். வந்து பார்த்ததும் திடுக்கிட்டான். அவர்கள் போலீசு உடையில் வந்திருந்தார்கள். எக்கோவைத் தொடர்ந்து வந்த மல்லிகாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவளுடைய பெற்றோர் என்ன நடக்குமோ என்று மலைத்து நின்று விட்டனர்.

'ஏன் என்னைத் தேடுகிறீர்கள்?' என்றான் எக்கோ.

'உங்களைக் கைது செய்ய உத்திரவு வந்திருக்கிறது' என்று கூறினார் போலீசுத் தலைமை அதிகாரி.

'காரணம்?'

'நீங்கள் 'புரட்சி' என்ற பத்திரிகையில் எழுதிய 'சுடுகாட்டிலே' என்ற கட்டுரை அரசாங்கத்திற்கு முரணானது. அதனால் உடனே கைது செய்யும்படி உத்திரவு வந்துள்ளது' என்று அரசாங்க ஆணையை நீட்டினார்.

அதைப் பார்த்துவிட்டு, 'ஓ, அப்படியா! தயார், புறப்படுங்கள், வருகிறேன்' என்று புறப்பட்டான்.