பக்கம்:எக்கோவின் காதல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

37

என்றுதானே எழுதினார். அவர் என் கணவர் என்பதற்காக நான் கூறவில்லை. அவர் எனக்காக மட்டும் எழுதவில்லை. உங்களுக்காக - உங்கள் சந்ததிக்காகத் தான் இன்று சிறையில் இருக்கிறார். இதுமட்டுமன்று, இன்னும் கொலைத் தண்டனை பெறுவதற்குங்கூட ஆயத்தமாக இருக்கிறார். அதை நீங்கள் உணரவேண்டும். உணராவிட்டால் அவர் செய்த தியாகம் விழலுக்கிறைத்த நீராகும். நீங்கள் என்றுமே அடிமையாக வாழப்போகிறீர்களா? நீங்கள் அவ்வாறு வாழ்ந்ததுமன்றி உங்கள் பரம்பரையையும் அடிமையாக்கவே எண்ணிவிட்டீர்களா? என்ன சொல்லுகிறீர்கள்? ஒவ்வொரு நாட்டையும் பாருங்கள்! அதைப் பார்த்த பிறகும் நாம் உணர்வற்றவர்களாக இருப்பது அழகா? நீங்கள் நினைத்தால் - ஒன்றுபட்டால் எக்கோவை வெளிக் கொணரலாம். ஏன்? நாட்டையே எதேச்சாதிகாரத்தின் பிடியிலிருந்து விடுவிக்க முடியும். நீங்கள் ஒவ்வொருவரும் மற்றவரைத் தோழர் என்று எண்ண வேண்டும். அந்த உணர்ச்சி குருதியோடு கலந்து விட்டால் மக்கள் துன்பம் உங்கள் துன்பமாகத் தோன்றும். சிதைந்து கிடக்கும் நீங்கள் சீறி எழுவீர்கள். அந்தச் சீற்றத்திற்கு முன் துப்பாக்கிகள் என்ன செய்ய முடியும்?

'நாட்டு மக்கள் நல் வாழ்வு வாழவேண்டும். அவர்கள் விடுதலைப் பறவைகளாகப் பறந்து திரியவேண்டும். அதற்காக நான் பலியாக வேண்டும்' - இதுதான் எக்கோவின் காதல். அவர் காதலை நீங்கள்தான் ......என்று பேசிக் கொண்டிருக்கும்போது இடையில் அதிகாரி ஒருவர் வந்து மல்லிகாவின் கையில் ஒரு கடிதத்தை நீட்டினார். மல்லிகா அதைப் படித்து விட்டுக் 'கூட்டத்தைக் கலைக்க முடியாது; மன்னித்துக் கொள்ளுங்கள்'; என்று மீண்டும் பேசத் தொடங்கினாள்.

சிறிது நேரத்தில் 'டுமீல்! டுமீல்!' என்ற சத்தங்கள் கேட்டன.