பக்கம்:எக்கோவின் காதல்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

 நாங்கள் அங்குச் சென்றது முழுக்குக்கு அன்று; அங்கு நடந்த ஆண்டு விழாவில் பங்குபெறச் சென்றிருந்தோம். நான் தேசிய வாதி, மாறன் பெரிய சீர்திருத்தவாதி! கொள்கையில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் இருப்பினும் நட்பில் எதுவும் குறுக்கிடாது. “நாமிருவராகவே" இருந்து வந்தோம். 'காந்தி --- ஜின்னா சந்திப்பை' விட எங்கள் சந்திப்பை - நட்பை வெகுவாகப் பேசுவார்கள். பள்ளித் தோழமை அவ்வாறு வளர்ந்திருந்தது.

மாறா! பேச்சைக் கேட்டாயா! எல்லாம் இந்தச் “சூனாமானா"க்களால் வந்த வினையப்பா. கடவுட் கொள்கையைப் பற்றிக் கண்டபடியெல்லாம் “பிரச்சாரம்" செய்து வந்ததால் நேர்ந்த விளைவு இது” என்றேன்.

"சுந்தரம்! வீணாகப் பழிசுமத்தாதே! மக்களிடையே அறிவு வளர வளர மடமை மறைகிறது. இதற்கும் யாரும் பொறுப்பாளியல்லர். காலச் சூழலில் சிக்குண்ட கண்மூடிக் கொள்கை சிதறுண்டு போவதற்கு யார்தான் என்ன செய்ய முடியும்?” என்று சொற்பொழிவு செய்யத் தொடங்கிவிட்டான் மாறன்.

ஆனால் நான் அவன் பேச்சைக் கவனிக்கவேயில்லை. என் மனத்தையும் கண்ணையும் எதிரில் மழைக்கு ஒதுங்கியிருந்த மங்கையிடம் செலுத்திக் கொண்டிருந்தேன். அவளுடைய அழகின் வயப்பட்ட மனத்தை மாற்ற முடியவில்லை. மழையில் நனைந்த வெண்மையான ஆடை அவள் உடலின் சிவப்பை எடுத்துக்காட்டி என் உள்ளத்தை இழுத்துக் கொண்டிருந்தது. நகைகள் போட்டிருந்தால் அந்த நங்கையின் அழகு கொஞ்சம் குறைவாகத்தான் தோன்றும். அதை அறிந்து தானோ, என்னவோ அவள் நகை அணியவில்லை. அழகான அந்த முகத்தில் ஏதோ ஒரு வாட்டம் - கவலைக் குறி ஊடாடியது. நீராடியதால் நனைந்து தொங்கிக்