பக்கம்:எக்கோவின் காதல்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

 சில மாதங்களுக்குப் பின் சென்னை சென்று திரும்பி வந்தேன். நண்பன் மாறனைப் பார்க்கச் சென்றேன்.

என் முகத்தில் வெற்றிக்குறி விளையாடுவதைக் கண்டு “என்ன சுந்தரம்! எதிர்பார்த்தபடியே கிடைத்துவிட்டதோ” என்றான்.

"ஆம் எதிர்பார்த்தது தான். ஆனால் நான் சென்னை செல்லும்பொழுது எதிர்பார்க்கவே இல்லை. இருந்தாலும் என் எண்ணம் நிறைவேறிவிட்டது” என்றேன்.

"என்ன... ஒரு... நாலாயிரமாவது கிடைத்திருக்குமா? இருந்தாலும் சுந்தரம்! நீ ஒரு தேசியவாதியாயிருந்து கொண்டு "இந்தக் கள்ள மார்க்கட் வியாபாரம் செய்யக் கூடாதப்பா!”

"மாறா! அதை நான் சொல்லவில்லை. வியாபாரத்திற்கும் தேசியத்திற்கும் என்ன சம்பந்தம்? அது கிடக்கட்டும். நான் சொல்வது வேறு. கடைமுழுக்கன்று பார்த்தோமே ஒரு பெண்ணை . அது முதல் பரிதவித்துக் கொண்டிருந்தது என் மனம். அவளை அடையமுடியுமா? அவள் எங்கிருக்கிறாளோ? யாரோ? எந்த ஊரோ? என்று ஏங்கிக் கொண்டிருந்த உள்ளத்திற்குச் சாந்தி கிடைத்தது” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது குறுக்கிட்டுப் பேசத் தொடங்கினான், மாறன்.

“என்ன என்ன! மழைபெய்யும்போது பார்த்த பெண்ணா! சாந்தி கிடைத்ததா அந்தப் பெண்ணை மறுபடியும் பார்த்தாயா என்ன நடந்தது? விளக்கமாகச் சொல் சுந்தரம்” என்று சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்தவன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.