பக்கம்:எக்கோவின் காதல்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

விட்டாள். சில நாளில் பரமன் கங்கையைத் தேடிச் சென்று விட்டான். அவள் சில நாள் அங்கேயே இருந்தாள்.

பாவை, பணமும் கையுமாய் நிற்கையில், பத்திரிகை ஆசிரியர் ஒருவர் அபயமளித்தார். அவர் உதவியால் தான் சென்னைக்கு வந்திருந்தாள். சினிமாவில் கூட ஏதோ “சான்சுக்கு முயற்சி நடப்பதாகவும் கூறினாராம்.

இவ்வளவையும் அவள் வாயால் கேட்டால் கல்லும் உருகி விடும். கேட்டுக் கொண்டிருந்த நான், "ஏன் இப்படி யெல்லாம் கெட்டுப் போக வேண்டும்? நல்ல அழகு, இளமை, அறிவு இருக்கிறதே யாரையாவது மணந்துகொண்டால் என்ன?” என்று கேட்டேன்.

"மணமா! நான் விதவை! தாசி! என்னை யார் மணப்பார்கள்? அப்படியே சரி என்று யாரேனும் வந்தாலும், விரும்புவதைப் பெற்றுக்கொண்டு, உதறித் தள்ளிவிட்டு, ஓடிவிடுகிறார்கள். சீர்திருத்தம் பேசி விட்டுச் செயலுக்கு வரும்போது ஓடி ஒளியும் வீரர்களைத்தானே காண்கிறேன். ஒருவரிடம் வாழத்தான் எண்ணினேன். ஆனால் அதற்கு அற்பாயுள்தான். கழுத்தில் ஒரு கயிறு மட்டுமிருந்தால்...” முடிப்பதற்குள் நான் குறுக்கிட்டு,

“இதோ பார்! நானே உன்னை மணந்து கொள்கிறேன். இணைபிரியாது வாழ்வோம். ஆண்டவன் மீது ஆணை. உன்னைப் பிரியவே மாட்டேன். கடைமுழுக்கன்று கண்டது முதல் உன் வயமாகி விட்டேன். நீ என்ன சொல்லுகிறாய்?" என்றேன்.

"ஆண்டவனை நீங்கள் நம்புகிறீர்களா? ஆண்களே இப்படித்தான். தங்கள் காரியம் ஆகும் வரை அந்த ஆணை