பக்கம்:எக்கோவின் காதல்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

இதமாகப் பேசிப் பேசிச் சிரிக்க வைத்து விடுகிறார். இருந்தாலும் நானும் பெண்தானே! எப்பொழுதாவது புடவை நினைப்பு வந்து விடும். உடனே அவர் கண்டு கொள்வார். கவலைப்படாதே! இன்னும் ஐந்து நாளில் புதுப்புடவை எடுத்து வருகிறேன் என்று சொல்லுவார். அதன்படியே புடவையும் வந்து விடும். பின்னர் என்றைக்காவது சொல்லுவார் பத்திரிகைக்குக் கட்டுரை எழுதிக் கொடுத்து, அந்தப்பணத்தால் வாங்கினேன் என்று.

அவரிடம் ஒரே ஒரு கெட்ட குணம் இருக்கிறதம்மா! சும்மா பேசும்பொழுது நல்ல தமிழில் பேசு! நல்ல தமிழில் பேசு! என்று தொந்தரவு செய்கிறார்; சமஸ்கிருதம் என்று கூடச் சொல்லக்கூடாது. வடமொழி என்று சொல்லு என்றெல்லாம் தொந்தரவு செய்கிறார். எனக்குக் கஷ்டமாக - இல்லையில்லை - துன்பமாயிருக்கிறது. மற்ற வகையில் குறைவில்லாமல் இருக்கிறோம்.

வள்ளி

அம்மா! நலம்,

இப்பொழுது உன் மகள் தமிழ்ப் புலமை மிக்காள். என் புலமையைக் காட்டி முடங்கல் (கடிதம்) வரைவேன். ஆனால் உனக்கு விளங்காதே என்று தான் எளிய நடையில் எழுதுகிறேன். முன் கடிதத்தில் அவர் கூறுவதெல்லாம் தொல்லையாயிருக்கிறது என்றல்லவா எழுதியிருந்தேன். அஃது என் அறியாமை. என்போன்ற பெண்களெல்லாம் நமது தாய்மொழியைப் புறக்கணித்ததால்தான் இந்த இழிநிலை வந்துள்ளது.

இப்பொழுது எனக்கு நல்ல தமிழ் அறிவை ஊட்டிவிட்டார். தனித்தமிழில்தான் உரையாடுவோம். இலக்கியங்களை