பக்கம்:எங்கே போகிறோம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118 ◯ எங்கே போகிறோம்?

கூடி வாழ்தல் என்பது எளிதன்று. சுய நலமும், தன் முனைப்பும் மனிதனைக் கூடிவாழ, கூடித் தொழில் செய்ய அனுமதிக்காது. ஒருமையுளராகி உறவுகளைப் பேணி வளர்க்கத் தெரியாதார் குற்றங்களை முயன்று காண்பர், இயல்பாகக் குற்றங்கள் இல்லையெனினும் படைப்பர்; சிறுமை தூற்றுவர். இத்தகு மனப்போக்குடையோர் கூட்டுறவு வாழ்க்கைக்கு ஒத்துவர மாட்டார்கள்.

நோயும், மரணமும் துரத்தினாலும், எப்படியாவது வாழ்ந்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் மருத்துவர்களை நாடுகின்றோம்; மந்திரங்களை நாடுகின்றோம்; சாமிகளைக் கும்பிடுகின்றோம். அதுபோலத்தானே மனித உறவிலும் பிரிவுகள் தோன்றுவது! இந்தப் பிரிவுகள் உடனுக்குடன் மருத்துவம் செய்யப் பெற்றுச் சீர்செய்யப் பெறாவிடில் கூட்டுறவு வளராது.

கோடிக்கணக்கான செங்கற்களைக் கொண்டுதான் சுவர்கள் எழுப்பப்படுகின்றன. அவற்றில் அடுக்கப் பெறும் கற்கள் ஒன்றையொன்று தழுவித் தாங்கிக் கொள்வதன் மூலமே சுவர்கள் எழும்புகின்றன. அதுபோல, நாம் ஒவ்வொருவரும் பிறிதொரு நபரைத் தழுவித் தாங்கி அழைத்துக்கொண்டு போனால் கூட்டுறவு தோன்றும்; சமூகமும் தோன்றும்.

அதுமட்டுமா? கொத்தனார் சுவர் கட்டும்பொழுது இடைவெளியைச் சரிசெய்ய சல்லிக் கற்களைப் போடுவார். சல்லிக் கற்கள் கிடைக்காது போனால் முழுக்கல்லை உடைத்துச் சல்லியாக்கிப் போடுவார். ஆனால், சுவரில் சல்லி இருப்பது தெரியாது. சுவரின் வெளிப்புறத் தோற்றம் மட்டுமே தெரியும். சுவர் தன்னுள் அடங்கியிருக்கும் சல்லிகளைக் காட்டாது. முழுத் தோற்றத்தை மட்டும்தான் காட்டும்.