பக்கம்:எங்கே போகிறோம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொருளாதார வளர்ச்சியில் கூட்டுறவின் பங்கு 123

மக்களின் சிந்தனைப் போக்கையும் செயல்களையும் மாற்றிச் சமுதாயத்திற்குப் பயன்படுபவர்களாக மாற்றுவதில்தான் கூட்டுறவின் வெற்றி இரகசியம் இருக்கிறது. சமூக மாற்றத்திற்கு உந்து சக்தியாகவும், உறுதுணையாகவும் கூட்டுறவு வெற்றி பெற்றால்தான் கூட்டுறவு இயக்கத்திற்கு அர்த்தமுண்டு.

கூட்டுறவு வெற்றி பெற்றால்தான் நமது நாட்டின் பொருளாதாரம் பலமான அஸ்திவாரத்தில் அமையும். நாட்டின் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு ஏற்படும்.

இன்று நமது நாட்டில் கூட்டுறவு இயக்கம் வலிமையாக இல்லை. ஏன் பொதுவாகச் சிற்றூரிலிருந்து டில்லி வரை ஆட்சியிலும், பொருளாதார முயற்சிகளும் ஜனநாயக மரபுகள் வழி நடக்கவேண்டும் என்பதே அரசியல் சட்டத்தின் நோக்கம். ஊராட்சி, கூட்டுறவு அமைப்புகளில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும்.

இன்று நம்முடைய நாட்டில் ஊராட்சி மன்றங்களிலும், கூட்டுறவு அமைப்புகளிலும் மக்கள் பங்கேற்க முடியாமல் அரசு, அதிகார வர்க்கத்தின் கையில் ஒப்படைத்து விடுகின்றது. காடு பாதி, நாடு பாதி என்பது போலத்தான் கூட்டுறவு இயக்கம். தங்களுடைய உரிமை பறிக்கப்பட்டமை குறித்து மக்களிடத்தில் கோபம் எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

அந்த அமைப்புக்கள் இயங்கியபோது, அங்கத்தினர்கள் அந்த அமைப்புக்களில், ஆவேசிக்கப் பெற்றுப் பங்கு பெற்றிருந்தால் கோபம் வந்திருக்கும். பல கூட்டுறவு அமைப்புகளில் தூங்கும் அமைப்புகளே மிகுதி. மகாசபைக் கூட்டத்திற்கு அங்கத்தினர்களின் வருகை மிகவும் குறைவாகவே இருக்கும். “கோரத்தை வைத்தே தப்பித்துக் கொள்வார்கள் நிர்வாகிகள்.”