பக்கம்:எங்கே போகிறோம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128 O எங்கே போகிறோம்?

ஒரு வேலையை ஊதியத்தையே குறிக்கோளாகக் கொண்டு செய்வது அல்லது பயந்து கொண்டு செய்வது என்ற குணமிருந்தாலும் அடிமைத் தனமேயாம்;

ஒரு வேலையை-ஒரு பணியை அந்த வேலைக்காகவே தாமே ஆர்வத்துடன் பயன்பாடு கிடைக்கும் வகையில் செய்வது சுதந்திரமான வாழ்க்கையாகும். தாம் எடுத்துக்கொண்ட பணியை முறையாகச் செய்வதே இலட்சியம்; சுதந்திரம்; இன்பம்!

ஒருவன் தன்னுடைய வாழ்க்கையின் இலட்சியம் எது என்று சிந்தனை செய்து முடிவு செய்ய வேண்டும். ஒரு சிலருக்குத் தன் வாழக்கைக்கு என்று இலட்சியம் நிர்ணயம் செய்துகொள்ளும் சூழல் அமையாதுபோகலாம். அப்போது நீரும் நிழலும் போலத் தன்னுடைய தோழமையாகப் பழகும் சில நண்பர்களையும் உடன் சேர்த்துக்கொண்டு ஒரு கூட்டு இலட்சியமாக எடுத்துக்கொள்ளலாம். பலர் வாழ்வில் இதுவே நடைமுறையில் சாத்தியம்; அப்படி எடுத்துக்கொண்ட இலட்சியத்திற்காகவே வாழ்தல் வேண்டும்; போராட வேண்டும்.

இலட்சியம் என்பது பெரும்பாலும் நாட்டையும் மக்கட்சமுதாயத்தையும் மையமாகக்கொண்டுதான் அமையும். மற்ற உயிர்க்குலத்தை மையமாகக் கொண்டு இலட்சியம் தோன்றலாம். மொழி, சமய அடிப்படையிலும் கூட இட்சியம் தோன்றலாம். எடுத்துக்கொண்ட இலட்சியத்தை அடைவதற்கேற்றவாறு தன்னுடைய ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இலட்சியம் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. கடந்த காலத் தோல்விகளையும் துன்பங்களையும் மறத்தல், தன்முன்னே நிற்பனவற்றை நாடுதல், நிகழ்காலத்தை மதித்தல், எதிர்காலத்தை நோக்கி விரைந்து பணி செய்தல் முதலிய குணங்கள் வேண்டும்.