பக்கம்:எங்கே போகிறோம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170 எங்கே போகிறோம்?

குடிமக்கள் தகுதி பெற்றவர்கள் மிக மிகச் சிலரே. 10 விழுக்காடு கூட இருக்க மாட்டார்கள். நாட்டுப் பற்றும், எல்லோரும் இந்தியர் என்ற உணர்வும் இன்று அருகி வருகிறது. நாட்டுக்காக அரசியல் என்பது போய், தனது ஆதாயத்துக்காக அரசியல் என்பதாகி விட்டது.

அன்று அன்னியர்கள் சுரண்டினார்கள். இன்று இந்தியர்களே இந்தியாவைச் சுரண்டுகிறார்கள். இந்த அவலம் எளிதில் அகலாது. பொது மக்கள் கருத்துத் திரண்டால், பொது மக்கள் இதுபற்றி பேசினாலே கூட அகலும். பொது மக்களிடத்தில் அரசியல், சமூக விழிப்புணர்வுகளை உண்டாக்குங்கள் போர்க் குணத்தை உருவாக்குங்கள்!

சுதந்திர தினப் பொன்விழா வரப்போகிறது. இன்னமுமா வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வது? நமது நாட்டு இளைஞர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தினால் தவித்தும் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் கூட அமையாத வாழ்க்கையில் ஒரு புழுவென நெளிந்தும் எத்தனை ஆண்டுகள் வாழ்வது? நெடுந்துயிலிலிருந்து விழித்துக் கொள்! பொது மக்களிடம் விழிப்புணர்ச்சியை உண்டாக்கு! தன்னை நாடிக் கேட்பவர்களுக்கும், ஏதாவது தருபவர்களுக்கும், விளம்பர மன்னர்களுக்கும், வாக்களிக்க மாட்டோம் என்று உறுதி கொள்ளச் செய்க!

அடக்கமாக இந்த நாட்டை நேசிப்பவர்களை இந்த நாட்டு மக்களை நேசிப்பவர்களைத் தேடிப் பிடித்து வேட்பாளர் ஆக்குங்கள்! அவர்களுக்கே வாக்களியுங்கள்! இந்த நாட்டில் ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்தவர்களுக்கு இந்த நாட்டைப் பற்றித் தெரியாதா? யாருக்கு வாக்களித்தால் நல்லது என்று இளைஞர்களுக்கு வழிகாட்டக் கூடாதா?