பக்கம்:எங்கே போகிறோம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உழைப்புச் சிந்தனைகள் O 49

ஆனால் இது உழைப்பின். குறையன்று செல்வரிடம் சேரும் செல்வம் கூடப் பாட்டாளிகளின் உழைப்பின் விளைவே. பொருளாதார சுதந்திரமுடைய கூட்டுடமைச் சமுதாய அமைப்புத் தோன்றினால்தான், வளம்பெற முடியும். அதுவரையில் மனித உழைப்பு ஆதிக்க சக்திகளால் சுரண்டப் பெறுவது நடந்தே தீரும்.

ஆதலால், இன்றைய சூழ்நிலையில் கடுமையாக, உழைப்பவர்கள் பூரண வாழ்வு வாழ இயலவில்லை. இது வினோதமான-பைத்தியக்காரத்தனமான சமுதாய அமைப்பு அரசாங்க இயந்திரத்தை, சந்தைகளை, ஆளுமை செய்யும் பொறுப்பும், அதிகாரமும் என்று உழைப்பாளிகள் கைக்கு வருகிறதோ அன்றுதான் உழைப்பாளிகள் சிறப்பாக வாழமுடியும்.

புவியை நடத்தும் அதிகாரம் உழைக்கும் மக்கள் கைக்கு வரவேண்டும். அப்போதுதான் இந்த வையம் பொதுவில் நடத்தப் பெறும்.

உழைப்பின் அருமைப்பாட்டை உலகச் சிந்தனையாளர்கள் ஒரு குரலில் புகழ்கின்றனர். உன் கண் முன்னே பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வந்துள்ள மனித நாகரீகத்தைப் பார்! உன் முன்னே இருக்கும் மாட மாளிகை, கூட கோபுரங்களைப்பார். அவ்வளவும் ஆக்கம்! சென்ற காலத் தலைமுறையினுடைய படைப்பு!

இந்த மகத்தான சாதனையைப் பார்த்த புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் பிரமித்து நிற்கிறான்! விண்ணில் உள்ள விண்மீன்கள் உழைப்பாளிகளின் உடலில் தோன்றியுள்ள கொப்புளங்கள், என்று பாடுகின்றான்.

“அறிவற்றவன் சிரத்தையுடன் கூடிய உழைப்பை இழந்தவன், கெடுப்பார் இல்லாமலே கெட்டுப்போகிறான்” என்றார் விவேகானந்தர்.