பக்கம்:எங்கே போகிறோம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வளர்ச்சி-மாற்றம் 55

அதனால், சாதி, சம்பிரதாய, மூடப் பழக்கங்களும் நிறைந்து வறுமையில் கிடந்துழலும் கூட்டமாக மக்கள் மாறுவர். இது நாட்டுக்கு ஏற்றதல்ல.

ஆதலால், ஒவ்வொரு நாளும் சென்ற காலத்திலிருந்து: படிப்பினைகளை எடுத்துக்கொண்டு, நாளையை நோக்கி நடைபோட வேண்டும். வளர்ச்சி, முன்னேற்றம் என்பது நிற்பதும் அல்ல; பக்கவாட்டில் அசைந்து கொடுப்பதுவும்: அல்ல. எதிர்காலத்தை நோக்கி நடைபோடுவதுதான் முன்னேற்றம், வளர்ச்சி; மாற்றம்!

இந்தியா பழமை வாய்ந்த ஒரு நாடு. இந்திய நாகரிகத்தின் தொடக்கம் சொல்லமுடியாத அளவுக்குப் பழமை உடையது. மிகத் தொன்மை வாய்ந்த காலத்திலேயே மொழி, இலக்கிய ஆக்கங்களைப் பெற்றுச் சிறந்து விளங்கிய நாடு.

குறிப்பாகத் தமிழ் நாகரிகத்தின் பழமை, சிந்துவெளி நாகரிகத்தில் தொடங்குகிறது. தமிழ் நாகரிகம் -மெள்ள வளர்ந்து வந்து, இந்திய வரலாற்றுக்குத் தனது பங்கைச் செலுத்திச் செழுமைப்படுத்தி உள்ளது. இலக்கியங்கள் தோன்றிப் பலநூறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் இலக்கணம் தோன்றும் என்பர் மொழியியலார்.

இன்று தமிழில் உள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம். தொல்காப்பியம் 3500 ஆண்டுகளுக்கு முன் தோன்றியது என்பது அறிஞர் கருத்து.

அப்படியானால், அக்காலத்திற்கு முன்பே தமிழில் பல இலக்கியங்கள் தோன்றித் தமிழரிடையில் வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; தமிழர் தம் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும், தமிழர் வாழ்வு உண்மையான வளர்ச்சியை அடைந்ததா? மாற்றங்களைப் பெற்றதா? என்றால், இல்லை.