பக்கம்:எங்கே போகிறோம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58 எங்கே போகிறோம்?

திரும்ப மக்களிடம் மாற்றத்தை உண்டாக்க அரும்பாடுபட்டனர்.

கபீர்தாசரிலிருந்து கவிஞர் கண்ணதாசன் வரையில், பசவேசர் முதல் பாரதி வரை, குருநானக் முதல் குணங்குடி மஸ்தான் வரை, கணியன் பூங்குன்றன் முதல் தாகூர் வரை, அப்பரடிகள் முதல் அரதத்த சிவாச்சாரியார் வரை, வேமண்ணா முதல் வள்ளலார் வரை என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆயினும், இவர்களுடைய முயற்சியில் தேக்கம் சற்று அகன்றதே தவிர, மாற்றங்கள் முழுமையாக ஏற்படவில்லை.

அண்ணல் காந்தியடிகளும், அமரர் நேருஜியும் சமூக மாற்றத்திற்குக் கடுமையாக உழைத்தார்கள். தீண்டாமையை அகற்றவும் சமயங்களிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அண்ணல் காந்தியடிகள் தீவிரமாக முயன்றார்.

ஆயினும் சமய அடிப்படையில், இவற்றுக்கு எதிராகத் தூண்டப்படும் செயல்களைத் தவிர்க்க இயலவில்லை. அதுமட்டுமா? அண்ணல் காந்தியடிகளின் உயிரையே மதவெறி குடித்துவிட்டது. அண்ணல் காந்தியடிகள் காட்டிய திசையில் பாரதம் செல்ல மறுத்துவிட்டது. மறுத்ததோடன்றி அதற்கு எதிர்த் திசையில் சென்றது; சென்று கொண்டிருக்கிறது.

இன்று எங்குப் பார்த்தாலும் சாதிப் பிணக்குகள், மதச் சண்டைகள் நடைபெறுகின்றன. இதனால் இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கிறது. மாற்றங்கள் நிகழவில்லை! இன்றும் பலர் பழைய யுகத்திலேயே வாழ்கின்றனர். புது யுகக் காற்றைச் சுவாசிக்க மறுக்கின்றனர்.