பக்கம்:எங்கே போகிறோம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொருளாதாரச் சிந்தனைகள் 67

கலை ஆகிய அனைத்துத் துறைகளிலும் முயற்சிகள் மேற்கொள்ளப் பெறுதல் வேண்டும்.

இவையனைத்தும்-அதாவது, கல்வி, பொருளாதாரம் கலை ஆகியன ஒன்றையொன்று தழுவியன. ஒன்றின்றிப் பிறிதொன்று முறையாக வளராது; பூரண வளர்ச்சியும் தடைபெறாது. பொருளாதாரம் என்பதன் முழுப்பொருள் பணமுடையராதல் அல்ல; சொத்துடையராதல் அல்ல; வாழ்கைத் தரம் உயரவேண்டும் என்பதாகும்; பொருளுக்காக வாழ்க்கையல்ல; வாழ்க்கைக்காகவே பொருள்.

பொருளாதாரம் உயர்ந்து வாழ்க்கைத்தரமும் உயர்ந்து விளங்கினால்தான் பாதுகாப்புக் கிடைக்கும்; சமாதானமும் அமைதியும் கிடைக்கும். உலகத்தில் பலகோடி மக்கள் வறுமையில் கிடந்து உழலும்வரை சமாதான்மும், அமைதியும் பகற்கனவே.

மக்கட் சமுதாயத்தில் நிலவும் சமநிலையற்ற பொருளாதார அமைவை முதலில் சமநிலைப்படுத்த வேண்டும். இதுவே பொருளாதாரம். இந்திய சமூகப் பொருளாதாரத்தில் அசமப் பொருளாதார நிலையே தொடர்ந்து இருந்து வருகிறது. வறுமைக்கோடு விழுந்து விட்டது.

நம்முடைய இந்திய சமுதாயத்தில் தமிழ்ச் சமுதாயத்தில் நிலவும் பொருளாதார அசமநிலை இருள் நிறைந்தது. இந்த அசமதிலையை மாற்றத் தொலைத் தூரம் சென்றிடல் வேண்டும். அத் தொலைதூரத்திற்குச் செல்ல முயற்சி செய்வோம்!

நமது ஏழ்மை நிலைக்கு கிரகங்கள் காரணம் அல்ல. நாம் தான் காரணம். வறுமையையும், ஏழ்மையையும் தொடர்ந்து போராடி அகற்றாத நாம் தான் குற்றவாளிகள். திருந்துவோம்! திருத்தமுறத் திட்டமிடுவோம்! திட்டமிட்ட திசையில் செல்வோம்!