பக்கம்:எங்கே போகிறோம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொருளாதாரச் சிந்தனைகள் O 69

கூலியாகப் பெறும் தொகை கூடுதலாக இருக்கலாம். ஆனால் வாங்கும் சக்தியில்லை. நமக்கு உண்மையான சம்பளம் வாங்குவதிலும் பெறுவதிலும் அக்கறை வேண்டும். உண்மையான சம்பளம் என்றால் அது பணத்தின் அளவு அன்று; வாங்கும் சக்தியேயாகும். இதுவே இன்றைய நமது பொருளாதாரம் செல்லும் திசை.

இன்றைய இந்தியனின், குடும்பத்தின் சராசரி ஆண்டு வருமானம் 64 டாலர். அதாவது ஆண்டுக்கு சுமார் 1920 ரூபாய். மாதம் 160 ரூபாய் சம்பாதிக்கிறான். இந்த சம்பாத்தியத்தையும் விலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நமது பொருளாதாரத்தின் சமச்சீரற்ற நிலை விளங்கும்.

பொருளாதாரத்தில் வளராத நாடுகளில், வளம்-வறுமை இவை இரண்டிற்கும் உள்ள இடைவெளி மிகவும் கூடுதல். இந்த இடைவெளியை தொழிற் புரட்சி செய்வதன் மூலமும், வழங்கப்பெறும் கூலியில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதன் மூலமும்தான் குறைக்க இயலும்.

நமது குடியரசுத் தலைவர் “நம் நாடு இன்னும் பொருளாதார விடுதலை பெறவில்லை. அந்தப் பொருளாதார விடுதலையை என்று பெறுகின்றதோ அன்றுதான் இந்தியா பரிபூரண சுதந்திரத்தை அனுபவிக்கும்” என்று கூறியுள்ளார்.

ஆம்! அரசியல் சுதந்திரம் வந்ததில் பயன் என்ன? மக்கள் நலம்பெற்று வாழத்தானே சுதந்திரம்? தேர்தலில் ஆளுக்கு ஒரு வாக்குச் சீட்டு என்பது சுதந்திரமாகுமா? கோடீசுவரனின் வாக்குச் சீட்டு சுதந்திரமாகப் பயன்படுத்தப் பெறும்; கோடீசுவரனின் வாக்குச் சீட்டு விலை போகாது.