பக்கம்:எச்சில் இரவு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



3


சென்றாள். உடன் நிகழ்ச்சிப் பொருளுக்கோர் எடுத்துக்காட்டாக இருவரும் நடந்து சென்றனர்.

அவன் ஏறுநடை காட்டினான். அவளோ வேறுநடை காட்டினாள். அவனது வெற்றி நடையைக்காண, ஆங்கே வேங்கை வரிப்புலிகள் இல்லை. அவளது சிங்கார நடையைக் காண அப்போது ஆங்கே, செங்கால் அன்னங்கள் இல்லை.

அவன் நடந்தான்.

அவள் தொடர்ந்தாள்.

சிறிது நேரத்தில் இருவரும் சோலைவந்து சேர்ந்தனர். அந்த எழில்மிகு சோலையில், எப்பக்கம் பார்த்தாலும் மரகதப் பச்சை மரங்கள், நோக்கும் இடமெல்லாம் பூக்கள். அப்பூக்களின் மீது இசைபாடும் ஈக்கள்.

தேமாவின் பக்கத்திலே புளிமா; புளிமாவின் பக்கத்திலே பொரிமலர்ப் புன்னை மரங்கள். அங்குமிங்கும் மாமரங்கள், ஆச்சா என்னும் மராமரங்கள். இலவசமாக மலர்களைத் தரும் இலவமரங்கள்.

ஒரு புறத்திலே, யாப்பிலக்கணத்தின் குறியீடு மரங்களான கூவிள மரங்களும், கருவிள மரங்களும், பூப்பிலக்கணத்தைப் பச்சைக் கிளிகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தன.

மற்றொரு புறத்திலே, பக்குவமடைந்த பாக்கு மரங்கள். சில கொழுத்த மரங்களின் பக்கத்திலே கொடிகள். அந்தக் கொடிகளின் கக்கத்திலே குமரி அரும்புகள்.

அவனும் அவளும், அந்த இலைமலிந்த சோலையில் உறவாடாமல் உரையாடிக் கொண்டே நடந்தனர்.

அவன் நடையில், வல்லினம் வளர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/13&oldid=1244854" இலிருந்து மீள்விக்கப்பட்டது