"ஆமாம், கோபத்தில் உன் முகம் எப்படிச் சிவக்குமோ அப்படி, மழைநாளில் இதுவும் சிவந்து விடும் என்றான் அவன்.
"அப்படியா, கோபத்தைப் போல் சிவப்பதனால், இம்மலருக்கு நாம் கோபம், என்று பெயரிட்டால் என்ன? என்று கேட்டாள்.
“இடலாம். ஆனால், இதே பெயர் ஒருவகைப் பூச்சிக்கும் இருப்பதால், கோபம் என்பதை மாற்றித், ‘தீபம்’ என்று இதற்குப் பெயரிடலாம்,” என்றான் அவன்.
"தீபமா!...”தீபம் சுட்டுவிடுமே!” என்றாள் அவள்.
“தொட்டால்தானே!” என்றான் அவன்.
அப்போது, குயில் ஒன்று கூவியது. அந்த இளவேனிற் குயிலின் இன்னிசை விருந்தை இருவரும் ஒன்றாக உண்டனர்.
“வயிற்றுக்கு வேண்டிய உணவை யார் வேண்டுமானாலும் தந்துவிடலாம். ஆனால், செவிக்கு வேண்டிய உணவை, உலகில் ஒருசிலரால் மட்டுந்தான் தரமுடியும்” என்று கூறினாள் அவள்.
"ஆமாம்! அந்த நாளில், திருச்செந்துார் சண்முக வடிவு; திருநெல்வேலி ரெங்கம்மாள்; திருவிடைமருதூர் பவானி, தஞ்சாவூர் சாரதாம்பாள், பந்தநல்லூர் ராஜாயி, பழனி அஞ்சுகம், கோயம்புத்துார் தாய், சேலம் கோதாவரி முதலியோர் தம் இனிய குரலால் மக்களை மகிழ்வித்து வந்தனர். அவர்களுள் சேலம் கோதாவரி என்பவள், புகழ் பெற்ற பாடகியாக மட்டுமில்லாமல் சிறந்த கொடைவள்ளலாகவும் விளங்கியவள். அவள் தன் வாழ்நாளில் சம்பாதித்த செல்வத்தையெல்லாம்