இவ்வுலகிலே முற்றறிவு பெற்ற நிறைமொழி மனிதர் திருவள்ளுவர் ஒருவரேயாவர். தமது அறிவுக் கல்லுக்கு எல்லாப் பக்கங்களிலும் பட்டை தீட்டிக் கொண்டவர் அவர் ஒருவரே! அவர் தந்த மாணிக்கமே 133 பட்டைகளோடு எல்லாத் துறைகளிலும் சுடர்விட்டு ஒளி வீசிக் கொண்டிருக்கும் திருக்குறள்.
மனிதன் செய்கின்ற தவறுகளுள் மிகப்பெரிய தவறு. தன்னை 'அறிவில்லாதவன்' என்று நினைப்பது. அதை விடப் பெரிய தவறு, தன்னைப்போன்ற மற்றொருவனை 'அறிவில்லாதவன்' எனக் கருதுவது. எல்லாவற்றிலும் மிகப் பெரிய தவறு. ஒருவனை நோக்கி, 'நீ அறிவில்லாதவன்' எனக் கூறுவது.
'அறிவில்லாதவன்' என்ற இச் சொற்றொடரை, அறிவில்+ஆதவன் என்றும், அறிவு+இல்லாதவன் என்றும் பிரித்துப் பொருள் கூறலாம். ஆதவன் என்பது சூரியன் முன்னது உயர்வு, பின்னது தாழ்வு.
நான் கண்ட மக்களுள் எவரையும் அறிவில்லாதவராகக் கண்டதில்வை. எல்லாரிடத்தும் அறிவு இருந்து கொண்டே தானிருக்கிறது. மக்கள் என்ன? நடப்பன, பறப்பன, ஊர்வன நீர்வாழ்வன ஆகிய அனைத்துமே அறிவுடையனவாய்க் காணப்படுகின்றன. நம் முன்னோர்களுங்கூட இவற்றை