பக்கம்:எது வியாபாரம், எவர் வியாபாரி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



பாதுகாப்பு

ஒரு வியாபாரி சிக்கனமாக வாழ்க்கை நடத்திப் பொருளை சேமிப்பது மட்டும் போதாது. அவற்றைப் பாதுகாத்தும் ஆக வேண்டும்.

ஒருவர்க்கு பொருள் வந்து சேர்வது திடீரென்று வந்து விடாது. சிறுகச் சிறுக சேர்ந்து பின் பெருஞ்செல்வமாக வந்து காட்சியளிக்கும். ஆனால், போகும்போது சிறுகச் சிறுகப் போகாது; ஒரேயடியாய்த் திடீரெனத் தொலைந்து போய்விடும். ஒரு நாடகக் கொட்டகைக்கு மக்கள் ஒவ்வொருவராக வந்து பெருங்கூட்டமாகக் காட்சியளித்துப் பின் ஒரேயடியாகக் கலைந்து போவது போன்றதுதான் செல்வம் வருவதும் போவதும் - என்று வள்ளுவர் கூறுகின்றார்.

பல ஆண்டுகள் சேர்த்த செல்வத்தைப் பாதுகாக்கத் தெரியாமல் இழந்துவிட்டவர் பலர். இவர்களில் பெரும் பான்மையோர் உலகம் இன்னதென்று தெரியாதவர்கள். உலகம் இன்னதென்று நன்கறிந்த தரகர்களின் வஞ்சகச் சொற்களில் ஏமாந்து விடுவது இயல்பேயாகும்.

வியாபாரியாகவோ, தொழில் அதிபராகவோ இருப்பவர்கள், தம்மிடம் உள்ள தொகை முழுவதையும் தொழிலில் போட்டுவிடாமல் அத்தொகையைப் பத்துப் பங்குகளாகப் பிரித்து, ஐந்து பங்கினைத் தொழிலிலும், இரண்டு பங்கினை வீடுகளிலும், ஒரு பங்கினை வங்கியிலும், ஒரு பங்கினை ஆலைப் பங்கிலும்,அரைப்பங்கினை தங்கத்திலும் போட்டு அரைப்பங்கினை ரொக்கமாகவும் வைத்து இருக்க வேண்டும்.