பக்கம்:எது வியாபாரம், எவர் வியாபாரி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தமிழ்நாடு விற்பனையாளர் சங்கத் தலைவர்
S. V. S. சுந்தரமூர்த்தி B.A., B.L., அவர்கள்
மதிப்புரை

முத்தமிழ்க் காவலரின் எது வியாபாரம்? எவர் வியாபாரி? என்ற அரிய நூல் சிறந்த படைப்பாகும். வணிகர்களுக்கு மட்டுமன்றி வணிகவியல், நிர்வாகவியல் துறை மாணவர்களுக்கும், அது மட்டுமின்றித் தன் சொந்த முயற்சியால் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்கள் அனைவருக்கும், ஏன், பல்லாண்டு காலமாக வணிகத்துறையில் ஈடுபட்டுள்ள வணிகர்களுக்கும் ஒர் அருமையான வழிகாட்டு நூலாகும்.

கி. ஆ. பெ. அவர்கள் ஒரு தலைசிறந்த வணிகராகத் திகழ்ந்தார். வணிகத்துக்கும், வணிகனுக்கும் இலக்கணமாக விளங்கினார். இந்த உயரிய நிலையை எவ்வாறு எந்த ஒரு இக்கட்டான ஆதரவற்ற நிலையில் தனது 30வது வயதில், தந்தையை இழந்தபோது மனத்துணிவுடன், அயரா உழைப்புடன், நாணயத்துடனும், நேர்மையுடனும், தரமே பிரதானம் என்ற மாறாத கொள்கையுடனும், சிக்கனத்தை கைப்பிடித்து அடைந்தார் என்பது அனைவருக்கும் ஒரு பாடமாகும்.

அவர் காட்டியுள்ள சேமிக்கும் வழியும், சேமித்த செல்வத்தைப் பாதுகாக்கும் முறையும், ஒவ்வொரு வணிகரும் வாழ்க்கையில வெற்றி பெற அவசியமாகத் தெரிந்து கொள்ளவேண்டிய பண்புகளாகும்.