பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

13

நிலைப்படுத்தி, ஒரு சிறுகதையை உருவாக்கிவிட்டேன். கதையை முடித்ததும், ஒரு பரமார்த்த திருப்தி. அந்தக் கதையில் சில ‘அறிவுரைகளும்’ சொல்லப்பட்டதால், நாட்டைத் திருத்த என்னால் (என்னால் தான் அல்ல) முடியும் என்ற உறுதி. ஏதோ பிறந்ததற்கு பிரயோசனப்படுவது போன்ற நிறைவு. அந்தச் சிறுகதை நிச்சயம் பிரசுரமாகிவிடும் என்ற நம்பிக்கை. காரணம், அந்தக் காலத்துக்கு, அது வித்தியாசமான கதை. அரசியல் உப்பு கலந்த “பொடிக்” கதை. புதுதில்லியில் இருந்து எழுதிய கிராமத்துக் கதை. தனிநபர் வழிபாட்டை கண்டிக்கும் புதுக்கதை.

அங்கே கல்யாணம் - இங்கே கலாட்டா

1974-ம் ஆண்டு நடைபெற்ற இந்த உரையாடல் என்னை என் கிராமத்திற்கு 1950-களுக்குக் கொண்டு சென்றது. அப்போதைய காலகட்டம் மிகவும் வித்தியாசமானது. இப்போதைய தமிழன்போல் அறுக்கப்படும் போது கூட அழத் தெரியாத முயல்போல் இல்லாமல், போர்க்குணத்தோடு இருந்த காலம். இரயில், பேருந்து, சந்தை, கல்யாணம் போன்ற பொது நிகழ்ச்சிகளில் அரசியல் விவாதங்கள் அடிதடி அளவுக்குக் கூட போன காலம். அடைந்தால் திராவிட நாடு இல்லையானால் சுடுகாடு என்றும், பண்டித நேருவை நேரு பண்டிதர் என்றும், உழைப்பால் உயர்ந்த உத்தமர் காமராஜை படிக்காத பாமரர் என்றும், திராவிட முன்னேற்றக் கழகத்தினர் வாதித்து வந்த காலம். இந்த இயக்கத்தின் தலைவர் அண்ணாவை, காங்கிரஸ்காரர்கள் ஒரு சிலர் கொச்சையாக வருணித்த காலம். பள்ளிக்கூடம், கல்லூரி முதலியவற்றில் இந்தித்