பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154

சு. சமுத்திரம்

படும் போது ‘கலெக்டர் அம்மா’ சீப் செகரட்டரி தன்னைத் தப்பாக நினைத்திருப்பாரோ என்று கவலைப்படுவதாக இறுதியில் எழுதினேன்.

ஐந்தாவதாக எந்தச் சிறுகதையிலும் ஒரு சமூகப் பிரச்சினை தெளிவாகவே உணர்த்தப்பட வேண்டும். இந்தக் கதையில் “குட்டாம் பட்டியில் மனுநீதி நாளுக்காக அதிகாரிகளின் வரவிற்கு பொதுமக்கள் காத்திருந்தாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கலெக்டர் மனதில் ஒரு நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் முன்னால் எந்த வேலையும் செய்வதில்லை என்பது போல் நின்றார்கள்” என்று குறிப்பிட்டிருந்தேன். அதிகாரிகளின் மனப்போக்கால் குடியானவர்களின் எதிர்பார்ப்பு எப்படி வீணாகிறது என்பதையும் இன்றைய அதிகார வர்க்கம் எப்படி செயல்படுகிறது என்பதையும் சித்தரிப்பதே இந்தக் கதையின் நோக்கம். ஒரு கதையை எழுதி விட்டு அதைப் படிக்கும் போது எவையெல்லாம் எனக்கு போர் அடிக்கிறதோ அவை எல்லாம் வாசர்களுக்கும் போர் அடிக்கும் என்று நான் அடித்து விடுவேன் அல்லது திருத்திவிடுவேன்.

என்னடா இது, சமுத்திரம் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் அவர்பாட்டுக்கு லெக்சர் அடிக்கிறாரோ என்று நீங்கள் நினைக்கலாம். சமுத்திரம் கட்டுரை இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு வழி காட்டக் கூடியவை என்று வாசக நண்பர்களின் கடிதங்கள் நண்பர் வட்டத்தில் அடிக்கடி பிரசுரம் ஆவதால் ஏற்பட்ட கோளாறு இது. இந்தக் கோளாறு இனிமேல் வராமல் பார்த்துக் கொள்வேன்.