பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

173

குடிக்கள்ளன்

அண்மையில் ஆறு தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தேன். மதுரைக்கு அருகே கிடாரிப்பட்டி என்ற ஒரு கிராமம். அங்கே நிலச்சீர்திருத்த சட்டத்தால் கையகப்படுத்தப்பட்ட மிகுதி நில விநியோகம் பற்றி கண்டறியச் சென்றபோது ஒரு ரசமான செய்தி கிடைத்தது. அந்தக் கிராமத்திலும் அதன் சுற்றுப்புற வட்டாரத்திலும், முக்குலத்தோரில் கள்ளர் பிரிவினர் அதிகம். இதற்கு அடுத்தபடியாக முஸ்லீம்கள் இடம் பெறுகிறார்கள். நாடார்கள், மூப்பனார்கள் ஆகியோரும் உள்ளார்கள். பொதுவாக இந்தப் பகுதியில் சாதிச் சண்டை கிடையாது. சமயச் சண்டையும் கிடையாது. அதுவும் இந்து-முஸ்லிம் என்ற பேதமே எள்ளளவும் இல்லை. இதற்கு காரணம் குடிக்கள்ளன் என்ற ஒரு முறைமை அந்தப் பக்கம் இன்னும் பழக்கத்தில் இருக்கிறது. அதாவது சிறுபான்மையினரான ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்திற்கும் ஒரு கள்ளர் குடும்பம் அதன் நல்லது கெட்டதுகளை கவனித்துக் கொள்ளும். இதற்குக் குடிக்கள்ளன் குடும்பம் என்று பெயர். இந்தக் குடும்பத்திற்கும் சம்பந்தப்பட்ட முஸ்லிம் குடும்பத்திற்கும் சகோதர பந்தம் உண்டு. இந்த முறை, இத்தகைய இரு குடும்பங்களுக்குமிடையே காலங்காலமாக இருந்து வருகிறது. உதாரணமாக ஒரு முஸ்லிம் குடும்பத்துப் பெண்ணை வெளியூரில் கட்டிக்கொடுத்து, அங்கே அவள் பல இன்னல்களுக்கு ஆளானபோது, அவளுடைய சொந்த ஊர் குடிக்கள்ளன் தனது சகாக்களோடு அவளது புகுந்த வீட்டிற்குப் போய் அவளைத் துன்புறுத்தியவர்களை