பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

185

ஒரு சாராயக்காரர் என்னைக் கூட்டிக் கொண்டு போவதாக ஒப்புக்கொண்டார். எதற்கும் இரண்டு நாள் கழித்து பதிலளிப்பதாக குறிப்பிட்டிருந்தார். குறிப்பிட்ட அந்த நாளில் என்னைக் கூட்டிக் கொண்டு போக ஒரு நிபந்தனை போட்டிருந்தார். நானும் அவரோடு சேர்ந்து குடிக்க வேண்டுமாம். அப்போது தான் காய்ச்சலாளிகளுக்கு சந்தேகம் வராதாம். என் நோக்கம் தெரிந்தால் அங்கேயே என்னை வெட்டிப் போட்டுவிடுவார்களாம். நான் யோசித்தேன். ஒரு ‘முடக்கு’ குடிப்பதில் தப்பில்லை. ஆனால் அதுவே ஒரு விஷ சாராயமாக இருந்து கண்போய்விட்டால், ஒருவேளை அன்றைக்குப் பார்த்து போலீஸ் ரெய்டு நடந்து, அவர்கள் வலையில் பெரிய மீனான நான் அகப்பட்டு, பத்திரிகைகளுக்கு செய்தி போய் சாகித்திய அகாடமி எழுத்தாளர் குடிபோதையில் கைது என்று செய்திகளுக்கு செய்தியாகிவிடக்கூடாதே... எப்படியோ இறுதியில் கள்ளச்சாராயத்தில் கரை கண்ட ஒரு நண்பரை வைத்து, அந்தத் தொழிலின் ஊறல், காய்ச்சல், விநியோம் ஆகிய முப்பெரும் நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். சில குடிசைப் பகுதிகளுக்கும் சென்று இந்தத் தொழிலை இலை மறைவு காய் மறைவாகத் தெரிந்து கொண்டேன்.

இந்த அனுபவத்துடன், இன்னொரு அனுபவம் சேர்ந்தது. செங்கை மாவட்டத்தில் தமிழகமெங்கிலுமிருந்து கொண்டுவரப்பட்ட சுமார் 500 போலீஸ்காரர்கள் கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டனர். மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தச் சோதனையில் நூற்றுக்கணக்கான லிட்டர் ஊறல், பேரல்கள், முது