பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

☐ எனது கதைகளின் கதைகள்

195

போன்ற மனோமாயம் போன்ற எதிர்மறை விளைவுகளும் ஏற்படும் என்று எழுதப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில் எனது கிராமத்தின் அப்போதைய நிலையையும் இப்போதைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். அன்று கள்ளக் காதலுக்காக இரவோடு இரவாய் “பாம்பு கடித்து செத்துப்போன” பெண்களையும் இப்போது யாரோ ஒரு இளைஞனுடன் நான்கைந்து நாட்கள் ‘டூர்’ போய்விட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பி பெற்றோரால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற பெண்களையும் ஒப்பிட்டுப் பார்த்தேன்.

அண்மையில் ஊருக்கு போயிருக்கும்போது கேள்விப்பட்ட ஒரு சம்பவமும் நினைவுக்கு வந்தது. பீடி சுற்றிக்கொண்டிருந்த ஒருத்தி, ஒருவனுடன் (வெளியூர்க்காரன்) ஊரிலேயே சுற்றிவிட்டு, பிறகு அவனுடன் ஓடிப்போய்விட்டாள். ஓடிப்போன இடத்தில் அவர்களுக்குள் என்ன நடந்ததோ ஏது நடந்ததோ, ஒரு நாள் அந்தப் பெண் தன்னந்தனியாக ஊருக்கு வந்து, வீட்டுத் திண்ணையில் கூனிக்குறுகி உட்கார்ந்து விட்டாள். மகளைப் பார்த்து விட்ட தாய்க்காரி அவளை அப்படியே கட்டிப்பிடித்து, “அய்யோ எம்மோ.... என் மகளை அந்த நொறுங்குவான் மயக்க மருந்து போட்டு கூட்டிட்டு போயிருக்கானே.. இல்லாட்டா என் ‘பத்திரமாத்துத் தங்கம்’ அப்படிப் போகுமா.... இந்த அநியாயத்தை கேட்க ஆள் இல்லையா” என்று ஒப்பாரி போட்டு, அந்த ஒப்பாரிக்கிடையே மகள் காதிலேயும் கிசுகிசுத்தாளாம். அந்தப் பெண்ணும் தன்னை, கைக்குட்டையில் தடவிய ஒரு மருந்தால் சம்பந்தப்பட்டவன் முகத்தை துடைத்தான்