பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
என்னுரை


ஒரு படைப்பாளி, தன்னையும் சேர்த்தே படைப்பாக்குகிறார்.

மேட்டுக்குடியினரால் புறந்தள்ளப்பட்ட, நமது நாட்டுப்புறப் பாடல்களுக்கு புத்துயிர் வழங்குபவர்களில் ஒருவரான கவிஞர். குருவிக்கரம்பை சண்முகம், இந்த முன்னுரை எழுதுவது பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, தொலைக்காட்சியில் ரத்தினச் சுருக்கமாக தெரிவித்த கருத்து, நான் எழுதும் இந்த உரைக்கு முதல் வரியானது. ஆனாலும் —

ஒரு படைப்பாளி, தன்னை எப்படி அந்தப் படைப்பில் சேர்த்துக் கொள்கிறார் என்பதே முக்கியம். இது அவரது படைப்பை மேன்படுத்தலாம் அல்லது வீணடிக்கலாம். இதனால்தானோ என்னவோ, எனது மானசீக இலக்கியக் குருவான லியோடால்ஸ்டாய், “அனுபவம் முக்கியமல்ல... அனுபவத்தில் படிப்பினை கிடைப்பதே முக்கியம்” என்றார். இதை மேலும் புரிய வைப்பதற்காக, “வாழ்க்கை என்பது ஒரு சாளரம். அதன் வழியாக தெருவைப் பார்க்க வேண்டுமேயன்றி அதுவே தெருவாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்றார்.

இந்தப் பின்னணியில்தான், இந்த நூல், உங்களின் மேலான பார்வைக்கு வருகிறது. எனது அனுபவங்களில், சமூக வாழ்க்கையைக் குறுக்கிக் கொள்ளாமல் இந்த சமூகத்திற்குள், அவற்றை ஊடுருவ விட்டிருக்கிறேன்.

அனுபவம் எவ்வளவு முக்கியமோ, அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வதும் முக்கியம். அனுபவம் என்ற ஆசானால், எனது இளமைக் கால வாழ்க்கையை, கசப்போ இனிப்போ இல்லாமல் அசைபோட முடிகிறது. பின்னர் ஏற்பட்ட அனுபவங்கள் எனது சமூகக் கண்ணோட்டத்திற்கு நங்கூரம் ஆகின்றன. ஒரு மூத்த படைப்பாளி என்ற முறையில் இப்போது விழுதுகள் விட்டுக் கொண்டிருக்கும் நான், எனது வேர்கள் பற்றி எடுத்துரைக்க வேண்டியதும் அவசியமாகிறது... கடமையாகிறது.