பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

சு. சமுத்திரம் ☐

குறிப்பு

1. ‘பால்கணக்கு’ சிறுகதை பிரபல பிரசாத் ஸ்டுடியோ உரிமையாளரின் மகன் ரவியால் தயாரிக்கப்பட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. ரவி இனிமையான இளைஞர். ஆனால், அந்தத் தயாரிப்பு எனக்கு கசப்பைக் கொடுத்தது. சாகும் தருவாயில் இருக்கும் அந்தப் பெண் எப்பொழுது சாவாள் என்று வெட்டியான் ஆவலோடு காத்துக் கொண்டு இருப்பதாகக் கதையில் இல்லாத ஒன்றைச் சேர்த்து அந்தக் கதை கொச்சைப்பட்டது. எந்த வெட்டியானும் இப்படி நடந்து கொள்ளமாட்டார். இது கிராமத்துப் பண்பு. நகரத்து ‘டெஸ்ட டியூப் பேபி’ மன்னர்களுக்கு இதெல்லாம் தெரியாது. இனிமேல் என் கதைகள் என் மேற்பார்வையின்றி ஒளி வடிவம் பெற அனுமதிக்கலாகாது என்று உறுதி பூண்டிருக்கிறேன்.

2. சென்னைப் பல்கலைக்கழத்தின் தமிழத்துறை சார்பில் எழுத்தாளர்களை வரவழைத்து அவர்களையே தத்தம் கதைகளைப் படிக்கச் சொல்லி, ஒலிப் பேழையாக்கினார்கள். நானும், “வேலைக்காரியின் மகன்” “பால்கணக்கு” என்று இரு கதைகளை தமிழ் அறிஞர்கள் முன்னால் படித்தேன். பால்கணக்கு கதையைப் படித்தபோது கிட்டத்தட்ட அழுது விட்டேன். இறுதியில் ‘என்னைச் சிலர் இலக்கியவாதி இல்லை என்கிறார்கள். நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்’ என்றேன். உடனே தமிழ்த்துறை தலைவர் டாக்டர் பொற்கோ அவர்கள் வெகுண்டெழுந்து, ‘உங்களை இலக்கியவாதி இல்லை’ என்று சொல்பவர்களை நீங்கள் துச்சமாக மதிக்க வேண்டும் என்றார்.