பக்கம்:எனது நண்பர்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தலைவர் காமராஜர்

ழுபது ஆண்டுகளாக எனக்கும் விருதுநகருக்கும் தொடர்புண்டு. நட்பு, வணிகம், அரசியல், சமூக திருத்தம் ஆகிய பலதுறைகளில் பலமுறை அந்நகருக்குச் சென்று வந்திருக்கிறேன். இப்பெயர் உள்ள ஒருவர் அங்கு இருப்பதாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புகூட நான் அறிந்ததில்லை. அதன்பிறகுதான் அறிந்தேன், மிக அண்மைக் காலத்தில்தான் அவரைப் பார்க்கவும், பழகவும், பேசவும் எனக்கு வாய்ப்பு ஏற்பட்டது.

விருதுநகர் 1939க்கு முன்பு ஜஸ்டிஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது. அங்குக் காங்கிரஸிற்கோ, பிற கட்சிகளுக்கோ இடமில்லை. 1924 அதாவது இன்றைக்கு அறுபதாண்டுகளுக்கு முன்பு என்று எண்ணுகிறேன். பஞ்சுத்தரகு வைத்தியலிங்க நாடார் என்ற ஒருவர் தனலட்சுமி ஸ்டோர் என்ற பெயரால் ஒரு சுருட்டுக் கிடங்கை விருதுநகரில் வைத்து நடத்தி வந்தார். அவர் காங்கிரஸின் மீதும் காந்தியடிகள் மீதும் அதிகப் பற்றுள்ளவர் என்பதை, அவர் என்னிடம் புகையிலை வாங்க வந்தபொழுது அறிந்து கொண்டேன். அவர்தான் முதன் முதலில் திரு. சத்திய மூர்த்தி ஐயர் அவர்களை விருதுநகருக்கு வரவழைத்துப் பேசச்செய்தவர். அன்று அதற்கு அவ்வூரில் இருந்த எதிர்ப்பை இன்றைக்கு நினைத்தாலும் காங்கிரஸ் கட்சியினர் பீதியடைவர். நான் நினைப்பது சரியாக இருந்தால், திரு. காமராஜ் நாடார்