பக்கம்:எனது நண்பர்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

112  எனது நண்பர்கள்

மந்திரியை உருவாக்கும் அளவுக்கு உயர்ந்தது கண்டு. இந்நாடே பெருமைப்பட்டது.

ஒரு சிற்றுாரில் சிறு தொண்டராகத் தொடங்கி ஒரு நாட்டின் தலைமைப் பதவியை ஏற்கிற அளவுக்குத் திரு காமராஜர் அவர்கள் உயர்ந்தது, தொண்டு புரிவதன் அருமையையும், பெருமையையும் விளக்குவதாகும்.

அவர் எனக்கு மாறுபட்ட கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும், அவரது தொண்டு மாசற்றது என்பது என் எண்ணம். அவர் மிகுந்த இளைஞராய் இருந்தபோதும், திருமணம் செய்து இல்லற வாழ்வு வாழும் எண்ணமே இல்லாது, இந்நாட்டையே தனது குடும்பமாக எண்ணிப் பொதுத் தொண்டையே இன்ப வாழ்வாகக் கருதியவர், பொது மக்களுக்காகவே பொதுவாழ்வு வாழ்ந்துவருபவர் அன்பர் திரு காமராஜர் எனக் கூறலாம். அவர் இன்னும் பன்னெடுங் காலம் நல் உடல் நலத்தோடு நல்வாழ்வு வாழவேண்டுமெனவும், அவரது தொண்டு பொதுவாக இந்தியாவிற்கும், சிறப்பாகத் தமிழகத்திற்கும், தமிழிற்கும் பயன்பட வேண்டுமெனவும் வாழ்த்தினேன். என்செய்வது என் எண்ணம் நிறைவேறவில்லையே!