பக்கம்:எனது நண்பர்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 

அரசரும் நானும்


செட்டி நாட்டு அரசர் பெரியவர் ராஜா சர்.மு. அண்ணாமலைச் செட்டியார் அவர்கள் செட்டி நாட்டு அரசர் மட்டுமில்லை; தமிழகத்தின் மன்னராகவே திகழ்ந்தவர்.

இவர்களை நான் 60 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நன்கு அறிவேன். 1921இல் நீதிக் கட்சியின் திருச்சிக் கிளையின் செயற்குழுக் கூட்டத்தில் தமிழ்ப் பல்கலைக் கழகம் ஒன்று தேவையென முடிவு செய்யப்பெற்றது. அச்செய்தி அக்காலத் திராவிடன் நாள் இதழில் வெளி வந்தது. அதன் தொடர்பாகவே அரசரது தொடர்பு ஏற்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அமையும் பொழுது, அது ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகமாக இல்லாவிட்டாலும், அதனை ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகமாகவே எண்ணி மகிழ்ந்த தமிழக மக்களில் நானும் ஒருவன்.

பேராசிரியர்கள் கா. சுப்பிரமணிய பிள்ளை, நாட்டார் ஐயா, நாவலர் சோமசுந்தர பாரதியார், பண்டிதமணி கதிரேசச் செட்டியார், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் போன்ற தமிழ்ப் பேரறிஞர்கள் பலர் அப்பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்ததாலும், அப் பல்கலைக் கழகம் தமிழறிஞர்கள் பலரைத் தோற்றுவித்து உலகிற்கு உதவியதாலும், அப்பல்கலைப் கழகம் தமிழ்ப் பல்கலைக்கழகமாகவே காட்சியளித்ததில் வியப்பு ஒன்றுமில்லை.