பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125


ஒரு நாள் பெரியண்ணாவுக்கு ஊரிலிருந்து தந்தி வந்தது. அந்தத் தந்தியைப் பார்த்த உரிமையாளர்கள், காவடிப் பிரார்த்தனை செலுத்த எங்களை ஊருக்கு அனுப்பிவைக்க வேண்டு மென்று எழுதப்பட்டிருப்பதாகவும், திருவண்ணாமலை முடிந்து ஊருக்குப் போகலாமென்றும் சொன்னார்கள். புத்தன்சந்தை, சுப்பிரமணியசுவாமி கோவிலுக்குக் காவடியெடுப்பதாக நேர்த்திக் கடன் இருந்ததால் நாங்களும் அதை நம்பி விட்டோம். அன்றிரவு, பவளக்கொடி நாடகம் மிகச் சிறப்பாக நடை பெற்றது.

மறுநாள் பகலில் மற்றொரு தந்தி வந்தது. அதைப் பார்த்த உரிமையாளர்கள் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டார்கள். அன்று ஒய்வு நாள். அப்போது விழுப்புரத்தில் திரு.கன்னையா கம்பெனியின் நாடகங்கள் நடைபெற்று வந்தன. அந்த நாடகத்தைப் பார்க்கவேண்டுமென நாங்கள் அடிக்கடி ஆசையோடு பேசிக் கொள்வோம். உரிமையாளர் கருப்பையா பிள்ளை எங்களிடம், “கன்னையா நாடகம் பார்த்து வரலாமா?” என்று கேட்டார். பெரியண்ணா ஒப்புக்கொண்டார். நாங்கள் மூவரும் கருப்பையாபிள்ளையுடன் மாலையில் பயணமானோம் விழுப்புரம் ரயில் நிலையம் வந்தது. இறங்கவில்லை. பயணம் தொடர்ந்தது. அண்ணா, கருப்பையாபிள்ளையிடம் காரணம் கேட்டார். சும்மா வேடிக்கையாகச் சொன்னதாகவும், காவடிக் கட்டுக்குத் திருவனந்தபுரம் வரும்படியாக வற்புறுத்தி இரண்டாவது தந்தியில் குறிப்பிட்டிருப்பதாகவும், திருவனந்தபுரம் போவதாகவும் சொன்னார். நாங்கள் சிந்தனையில் ஆழ்ந்தோம்.

புகைவண்டி வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. முதலாளி கருப்பையாபிள்ளை எங்கள் சிந்தனையைக் கலைக்க. ஏதேதோ பேசினார். பெரியண்ணா மட்டும் அவருடைய பேச்சில் ஈடுபடவில்லை. நானும் சின்னண்ணாவும் அவரோடு உரையாடிப் பொழுது போக்கினோம். நீண்ட நேரத்திற்குப் பின் கண்ணயர்ந்தோம்.

தங்தையை இழந்தோம்

மறுநாள் மாலை திருவனந்தபுரம் வந்து சேர்ந்தோம். வீட்டை நெருங்கியதும் அவலச் செய்தி எங்களுக்காகக் காத்திருந்தது. வெள்ளைப் புடவை யுடுத்தித் தலைவிரி கோலத்துடன் இருந்த அன்னையாரைக் கண்டதும், “ஐயோ” என்றலறினோம். “உங்களைத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரேடா அப்பா” என்று அம்மாவின் அடிவயிற்றிலிருந்து எழுந்த குரல், நெஞ்சை உருக்குவதாக இருந்தது.