பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கலைவள்ளல் காசிப் பாண்டியன்

காசிப் பாண்டியன் அவர்களைப்பற்றி இங்கே சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். வீரபாண்டியக் கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்தது எட்டப்பர் பரம்பரை என்று நாம் எல்லோரும் பேசி வருகிறோம். அதே நேரத்தில் அந்தப் பரம்பரையில் பின்னால் தோன்றிய பல ஜமீன்தார்கள், தமிழ் மொழிக்கும், தமிழ்க் கலைக்கும் செய்துள்ள சிறந்த சேவையை நாம் நன்றி யுணர்வோடு போற்றவும் கடமைப் பட்டிருக்கிறோம். இராமநாதபுரம் சேதுபதி மன்னார்கள், தமிழ்ப் புலவர்களை ஆதரிப்பதில் எவ்வாறு முன்னணியில் நின்றார்களோ, அதேபோன்று கலைஞர்களை ஆதரிப்பதில் காசிப் பாண்டியன் அவர்களும், அவரது முந்திய பரம்பரையினரும் முன்னணியில் நின்றார்கள் எனக் கூறுவது சிறிதும் மிகையாகாது. இசை, நடனம், நாடகம், சிற்பம், சித்திரம் ஆகிய நுண்கலைகளையெல்லாம் நமது தமிழ் மன்னார்கள் ஆதரித்து வளர்த்தார்கள் என்பதற்குச் சான்றாக விளங்கக் கூடியவர் காசிப் பாண்டியன் அவர்கள். காசிப் பாண்டியன் சித்திரக் கலையில் வல்லவர். புகைப்படம் எடுப்பதில் நிபுணர். இசைக் கலையிலே தேர்ந்தவர். இவரது அரண்மனையில் எப்போதும் இன்னிசை முழங்கிக் கொண்டே இருக்கும். இவரது கையால் வரைந்த அற்புதச் சித்திரங்கள் சுவரை அழகுபடுத்தி நிற்கும். இசைக் கலைஞர்களுக்கும், நாடகக் கலைஞர்களுக்கும் பரிசுப் பொருட்களை வாரி வாரி வழங்கிய பெரு வள்ளல் என இவரைக் கூறலாம். இவரது அரண்மனையே ஒரு காட்சி சாலையாக விளங்கியது. இவர்கள் தந்த பரிசுகளும், காட்டிய ஆதரவும் எங்கள் நாடக வாழ்க்கையில் குறிப்பிடத் தக்க இடம் பெறக்கூடியவையாகும்.