பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கலைவாணரின் வளர்ச்சி

திருமயத்திலிருந்து சாய்பு ஒருவர் கம்பெனியை ஒப்பந்தம் பேசித் திருமயத்திற்கு அழைத்துப் போனார். மாதம் பதிமூன்று நாடகங்களுக்கு ரூபாய் 1500 என்று ஒப்புக் கொண்டோம். இந்த நாளில் ஒரே ஒரு நாடகம் நடத்த 1500 ரூபாய்கள் தேவைப்படுகிறது. அன்று பதிமூன்று நாடகங்களுக்குக்கொட்டகை வாடகை, விளம்பரச் செலவு மட்டும் நீக்கி, ரூபாய் 1500 என்றால் ஆச்சரியமாக இல்லையா? காண்ட்ராக்டரின் அதிர்ஷ்டம் திருமயத்தில் நல்ல வசூலாயிற்று. இரவு 8.45 வரையில் கூட்டமே இராது. இரவு 9 மணி சுமாருக்கு, நான்கு புறங்களிலிருந்தும் ரேக்ளா வண்டிகளிலும், மாட்டு வண்டிகளிலுமாகச் செட்டிப் பிள்ளைகள் வந்து கூடி விடுவார்கள்.

பாம்புக் காடு

திருமயத்தில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. ஒருநாள் அல்லி அர்ஜ்ஜுன நாடகம் நடந்துகொண்டிருந்தது. பாம்புப் பிடாரன் மகுடி ஊதும் காட்சியில் ஆர்மோனியம் கிருஷ்ணமூர்த்தி ஐயர் ஆர்மோனியத்தில் மகுடி வாசித்தார். காட்சி முடியும்போது ஆர்மோனியக்காரரின் பக்கத் தட்டியில், ஒரு நாகப்பாம்பு இருப்பதைப் பின்பாட்டுக்காரர் சாமிக்கண்ணு பார்த்து விட்டார். கூச்சல் போடாமல் ஆர்மோனியக்காரருக்கு ஜாடை மூலம் அறிவித்தார். அந்தப் பாம்பை அடிக்க முயன்றார்கள். அதற்குள் பாம்பு சரசரவென்று கீழிறங்கி எங்கோ மறைந்துவிட்டது. திருமயம் அந்த நாளில் ஒரு பாம்புக் காடாகவே இருந்தது. கற்றாழைப் புதர்களுக்கும், கரையான் புற்றுக்களுக்கும் நடுவேதான் கொட்டகை அமைந்திருந்தது. இரவு கொட்டகைக்குப் போய் வரவே எங்களுக்குப் பயமாக இருக்கும்.