பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

167


மாலை நேரங்களில் வெளியே போகும்போது அடிக்கடி பாம்புகளைப் பார்க்க நேரும். அது என்ன பாம்பு என்று எங்களுக்குள் விவாதம் நிகழும். ஒவ்வொருவரும் பலவிதமான பாம்புகளின் பெயர்களைக் குறிப்பிடுவார்கள். துணிவுள்ள சில பையன்கள் இருந்தார்கள். அவர்கள் என்ன பாம்பென்று சோதித்துப் பார்க்க முயல்வார்கள். ஒரு நாள் கற்றாழைப் புதர்களின் நடுவே நாங்கள் நின்று கொண்டிருந்தோம். சரசரவென்று சத்தம் கேட்டது. சுமார் நாலடி நீளமுள்ள ஒரு பாம்பு, எங்களை லட்சியம் செய்யாமல் புதர்களுக்கிடையே சென்றது. “அது விரியன் பாம்பு” என்றார்கள் சிலர். இல்லை, “ஓலைப் பாம்பு” என்றார் நகைச்சுவை நடிகர் எம். ஆர். சாமிநாதன். இதற்குள் புதர்களுக்கிடையே சென்ற பாம்பு, இரை விழுங்கியது போல் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. சாமிநாதன் தன் வாக்கை மெய்ப்பித்துக் காட்ட எண்ணி, கொஞ்சம் மண்ணை அள்ளி அதன்மீது வீசினார். அவ்வளவுதான்; ஊர்ந்து கொண்டிருந்த பாம்பு நின்றது; தலையைத் துாக்கி, தான் இன்னார் என்பதைக் காட்டுவதுபோல் மெதுவாகப் படத்தை விரித்தது. ‘ஐயோ, நல்ல பாம்பு’ என்று சிலர் அலறிக்கொண்டு ஓடினார்கள். அப்புறம் நாங்கள் ஏன் அங்கே நிற்கிறோம்?...இவ்வாறு திருமயத்தில் பாம்பைப் பற்றி நினைக்காத நேரமே இல்லை என்னும்படியாகப் பல நிகழ்ச்சிகள் நடை பெற்றன.

நடிகப் பரம்பரை

திருமயத்தில் சதியனு சூயா நாடகம் தயாராயிற்று. அதிலே ஒரு ராஜா, அந்த ராஜாவுக்குப் பெயர் இல்லை. இருட்டு ராஜா என்று நாங்கள் குறிப்பிடுவது வழக்கம். நறுமதையின் சாபத்தால் உலகம் இருளடைந்து விடுகிறது. கதிரவன் ஒளியின்றிக் குடிகள் கஷ்டப்படுகிறார்கள். இருள்நீக்கி, ஒளி காட்டி உதவுமாறு இருட்டு ராஜா, பதிவிரதை அனுசூயாவிடம் முறையிடுகிறார். இந்த இருட்டு ராஜாவாகச் சுவாமிகளிடம் பாடம் கேட்டு நடித்தவர் எங்கள் பெரியண்ணா டி. கே. சங்கரன். இருட்டு ராஜா வேடம் இப்போது என்.எஸ் கிருஷ்ணனுக்குக் கொடுக்கப் பெற்றிருந்தது. பெரியண்ணா பயிற்சியளித்துக் கொண்டிருந்தார்.