பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

191


அவர், இருவரையும் கூப்பிட்டுக் கண்டித்தார். “இனிமேல் சரியாகப் பாடுகிறோம்” என்றார்கள் நகைச்சுவை நடிகர்கள் இருவரும்.

வாய்ப்பினை இழந்தோம்

மறுநாள் பொழுது விடிந்த உடனேயே, இன்று சிரிக்காமல் பாடவேண்டும் என்று இருவரும் தங்களுக்குள்ளேயே உறுதி செய்து கொண்டார்கள். பாகவதர் வந்து உட்கார்ந்தார். இருவரும் தங்களைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ஒழுங்கான பிள்ளைகளாக வந்து, எதிரில் அமர்ந்தார்கள். பாகவதர் பழைய தோரணையில் பாடலைத் தொடங்கினார். என். எஸ். கிருஷ்ணனும், ராமசாமியும், பாகவதர் முகத்தை ஏறிட்டுப் பார்க்காமல் தலையைக் குனிந்து கொண்டே பாடத் தொடங்கினார்கள். ஆனால் மிகுந்த சிரமத்தோடு அவர்கள் அடக்கி வைத்திருந்த அந்த சிரிப்பு ஒரு முறைதான் கட்டுப்பட்டிருந்தது. இரண்டாம் முறை அவர்கள் கட்டுப்பாட்டை உடைத்துக் கொண்டு, சத்தத்தோடு பொட்டிச் சிதறியது. இருவரும் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினார்கள். பாகவதர் பொறுமை இழந்தார். “இந்தப் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க என்னால் இயலாது” என்றார். அப்படிச் சொன்னதோடு மட்டும் நில்லாமல் உடனடியாகப் புதுக்கோட்டைக்கும் பயணமானார், பெரியண்ணா அவரை எவ்வளவோ சமாதானப்படுத்தியும் பயனில்லாமல் போயிற்று. என். எஸ். கிருஷ்ணன் இதற்காக மன்னிப்புக் கேட்டுப் பாகவதருக்குக் கடிதமும் எழுதினார். ஆனால் பாகவதர் திரும்பி வரவே இல்லை. நாங்கள் மிகவும் வருந்தினோம். மும் மொழி நாடகமான பக்த ராமதாசை அரங்கேற்றும் வாய்ப்பு அப்போது எங்களுக்குக் கிட்டவில்லை. அந்த நல்ல வாய்ப்பு மதுரை ஸ்ரீ பால மீன ரஞ்சனி சங்கீத சபாவுக்குக் கிடைத்தது. பின்னர் சிவகங்கையிலிருந்து திருநெல்வேலிக்குப் போய்ச் சேர்ந்தோம்.

திருநெல்வேலியில் மீண்டும் வாத்தியார் கந்தசாமி முதலியாரும், அவரது புதல்வர் எம். கே. ராதாவும், கே. கே. பெருமாளும் வந்து சேர்ந்தார்கள். இம்முறை அவர்களோடு கே. பி. காமாட்சி சுந்தரமும் வந்து சேர்ந்தார். அவர்கள் வந்தபின் சந்திர காந்தா நாடகம் மீண்டும் பாடம் கொடுக்கப் பெற்றது.