பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழகம் திரும்பினோம்

கொழும்பில் இரண்டு மாதங்கள் நடித்த பிறகு, மேலும் பல ஊர்களுக்கு வரவேண்டுமென்று சண்முகம் பிள்ளை வற்புறுத்தினார். கொழும்பில் ஏற்பட்ட மூக்குப்பரி கலக அனுபவத்தால் வேறு ஊர்களுக்குப் போக நாங்கள் சம்மதிக்கவில்லை. நாடகங்கள் முடிந்தன.கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு எல்லோரும் புறப்பட்டோம். எதிர்பாராத நிலையில் எங்களுக்கு எதுவும் அபாயம் ஏற்படாதிருக்கச் சண்முகம் பிள்ளை ஏற்பாடு செய்திருந்தார். இருந்தாலும் கடைசி நிமிஷத்தில் என்ன நேருமோவென்று நடிகர்கள் பயந்து கொண்டிருந்தார்கள். மூக்குப்பரி சமரசமாகப் போய்விட்டதால் எல்லோரையும் பார்க்கவேண்டுமென்று ரயில் நிலையத்துக்கு வந்திருந்தார். சிற்றப்பா அவர் அருகிலேயே நின்று கொண்டு ஜாக்கிரதையாக அவரது ஒவ்வொரு செயலையும் உன்னிப்பாகக் கவனித்து வந்தார். முக்குப்பரியின் சிவப்பேறிய கண்கள் கோபால் பிள்ளையைத் தேடிக் கொண்டிருந்தன. பெரியண்ணாவிடம் மட்டும் மூக்குப்பரி அபார மதிப்பு வைத்திருந்தார். பெரியண்ணா அவரை நெருங்கி, “யாரைப் பார்க்க வேண்டும்?” என்று கேட்டார். “என்னை முதலில் அடித்தானே, அந்தத் தைரியசாலியைப் பார்க்க வேண்டும். அந்த ஆசாமி எங்கே?” என்று கேட்டார் அவர். “ஒரு அவசர காரியமாக அவர், முன்பே ஊருக்குப் போய்விட்டாரே” என்றார் பெரிய அண்ணா. இந்தச் செய்தியை அறிந்ததும் மூக்குப்பரி, ‘ஆஹா மோசம் போய்விட்டேனே; அவனையல்லவா தீர்த்துக் கட்டத் திட்டம் போட்டிருந்தேன்’ என்று வருத்தப்பட்டார். இதை மூக்குப்பரி வாய்விட்டுச் சொல்லியதும், எங்களுக்கெல்லாம் குலை நடுக்கம் எடுத்தது. அதற்குள் ரயிலும் புறப்பட்டு விட்டது. எல்லோரும் மீண்டும் கப்பலிலும், ரயிலிலுமாகப் பிரயாணம் செய்து கரூருக்கு வந்து சேர்ந்தோம்.